பள்ளிக்குச் செல்வோம்...
'ஆட்டோகிராப்', 'பள்ளிக்கூடம்' போன்ற திரைப்படங்கள் வெளியான பிறகு இளமைக்கால நண்பர்களையும், படித்த பள்ளிகளையும் பலர் தேடத் தொடங்கியுள்ளனர்.
'ஆட்டோகிராப்', 'பள்ளிக்கூடம்' போன்ற திரைப்படங்கள் வெளியான பிறகு இளமைக்கால நண்பர்களையும், படித்த பள்ளிகளையும் பலர் தேடத் தொடங்கியுள்ளனர். கரோனா காலத்தில் சமூக ஊடகங்களின் வாயிலாக பல குழுக்கள் அமைக்கப்பட்டு, முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைக்கப்படுவது அதிகரித்தது. அதன்பின்னர், முன்னாள் மாணவர்களின் சந்திப்புக் கூட்டங்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகேயுள்ள ஓலைப்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அது
குறித்து முன்னாள் மாணவரும், ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான சி.அ.முருகனிடம் பேசியபோது:
'இந்தப் பள்ளி 1926-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியாக இருந்தது. 2016-ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்ந்தது.
நூற்றாண்டு விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.முனிராஜ், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் இரா.மலைவாசன், வட்டாரக் கல்வி அலுவலர் பா.ஜோதி, மேற்பார்வையாளர் ப.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். விழாவில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன், பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் படித்ததை நினைவுகூர்ந்தார். பின்னர், அவர் ரூ.5 லட்சத்தை வழங்கி, அதை வைப்புத் தொகையாகச் செலுத்தி, அதில் வரும் வட்டியில் இருந்து ஆண்டுதோறும் கல்வியில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு உதவி அளிக்குமாறு கூறினார். இது
தவிர, பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 150 பேருக்கு விளையாட்டு ஆடைகளை அவர் வழங்கினார்.
எனது பெற்றோர் அய்யாசாமி - பூங்காவனம் நினைவாக, பள்ளி மாணவர்கள் 150 பேருக்கு குடிநீர்ப் பாட்டில்கள், தேர்வு எழுதும் அட்டைகள், முதலாம் வகுப்பு மாணவர்கள் 10 பேருக்கு கற்றல் உபகரணங்கள் அடங்கிய பைகளை வழங்கினேன். வழக்குரைஞர் பாலமுருகன் பள்ளிக்கு பீரோவையும், பெங்களூரைச் சேர்ந்த பழ வியாபாரி சதாசிவம் திருவள்ளுவர் சிலையையும் வழங்கினார்.
இப்படி முன்னாள் மாணவர்கள் பொருள்களாகவும், ரூ.50 ஆயிரம் வரையில் நன்கொடையாகவும் அளித்தனர். அது தவிர பள்ளிக்குத் தளவாடப் பொருள்கள், கற்றல் உபகரணங்கள், குடிநீர் சுத்திகரிப்புக் கருவிகள், திருக்குறள் நூல்கள், கடிகாரங்கள் உள்ளிட்ட பலவகையான பொருள்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டன.
முன்னாள் மாணவர் சங்கத்தை அமைத்து, மாணவர்களின் உயர்கல்வி வளர்ச்சிக்காக உதவுவது என முடிவெடுத்துள்ளோம். உயர்கல்வி பெறும் வகையில் வழிகாட்டுதல் கருத்தரங்குகள், உதவிகளை வழங்குவது எனக் கல்வி மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட உள்ளோம்' என்கிறார் முருகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





