திருக்கை மீன்

கடலில் வாழும் மற்ற மீன் இனங்களில் இருந்து உருவ அமைப்பில் முற்றிலும் மாறுபட்ட உடலைமைப்பைக் கொண்டது திருக்கை மீன். இவை சுறா மீன் இனத்திற்கு நெருங்கிய உறவு என்றும் இதன் வகைகள், சிறப்புகள் குறித்தும் ராமந
Updated on
1 min read

கடலில் வாழும் மற்ற மீன் இனங்களில் இருந்து உருவ அமைப்பில் முற்றிலும் மாறுபட்ட உடலைமைப்பைக் கொண்டது திருக்கை மீன். இவை சுறா மீன் இனத்திற்கு நெருங்கிய உறவு என்றும் இதன் வகைகள், சிறப்புகள் குறித்தும் ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..

""கடல் வாழ் உயிரினங்களில் சுறாவும், திருக்கையும் மட்டும் திசுக்களால் ஆன எலும்புகள் உடையவை. இவற்றின் எலும்புகள் லேசாக இருந்தாலும் உறுதியானதாக இருக்கும். தட்டையான உடலமைப்பின் மேற்புறத்தில் இரண்டு கண்கள் இருக்கும் இவை செவுள்களின் துணையுடன் சுவாசிக்கின்றன. சுமார் 500 வகைகள் இருப்பதாக கணக்கிடப்படும் இவ்வகை மீன்களில் மான்டா எனப்படுபவை மட்டும் கடலின் மேல்பரப்பில் வாழ்வதுடன் மிதவை நுண்ணுயிரினங்களை தின்று உயிர் வாழ்கின்றன. இவ்வகை தவிர மற்ற திருக்கைகள் கடலின் அடியில் தண்ணீர் அழுத்தம் மிக அதிகமாகவுள்ள இடங்களில் சுலபமாக நீந்தித் திரிகின்றன. இவற்றின் உடல் தட்டையாக இருப்பதால் கடலில் மிக ஆழத்தில் கூட எளிதாக நீந்துகின்றன.

கடலடியில் சேற்றில் புதைந்து வாழும் சிப்பிகளையும், சங்குகளையும் உடைத்து அதிலுள்ள உயிரினங்களைப் பிடித்து தின்னும் இவை இறால்களையும் பிடித்துச் சாப்பிடுகின்றன. அசைவ அயிட்டங்களைச் சாப்பிடுவதற்காகவே இதன் தாடை வளைவாகவும் பற்கள் கூர்மையாகவும் உறுதியாகவும் உள்ளன. ரம்பத்தை போன்ற பல் அமைப்புடைய ரம்பப் பல் திருக்கைகள் கடலுக்கு அடியில் பாறை இடுக்குகளில் மறைந்து வாழ்வதுடன் பிற ஜீவராசிகளையும் பிடித்து கொன்று சாப்பிடுகிறது. சதைப்பற்றுள்ள மீன்களைப் பிடித்து தின்பதற்காகவே இவற்றுக்கு ரம்பம் போன்ற பற்கள் இருக்கின்றன.

கொடுக்கு திருக்கை எனப்படும் வகைகளின் வாலின் முன்பகுதியில் இரு கொடுக்குகள் இருக்கும். இந்தக் கொடுக்குகளை அதன் எதிரிகளின் மீது பிரயோகப்படுத்தி மயக்கமடையச் செய்து அவற்றை தின்றுவிடும். இதுதான் இதன் பலமான ஆயுதம். கித்தார் இசைக்கருவி போன்றுள்ள திருக்கைக்கு கித்தார் திருக்கை என்றும் பெயருண்டு. சவுக்குத் திருக்கை, முள்ளம் திருக்கை என்ற இவை இரண்டு மட்டும் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி அவற்றைப் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. தாய்ப்பால் அதிகம் சுரக்க தாய்மார்கள் பால்திருக்கையையும் வாங்கிச் சாப்பிடுவதுண்டு.

பல வகையான மருந்துகள் தயாரிப்புக்கும் பயன்படுவதுடன் பல்வேறு ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலுக்கு அடியில் சூரிய ஒளியே புக முடியாத ஆழத்தில்கூட கடுமையான இருட்டில் வாழும் இவை திடீரென ஒருவித ஒளியை உமிழ்ந்து மின்சார அதிர்வை ஏற்படுத்தி வெளிச்சத்தை உண்டாக்குகின்றன. இந்தத் திடீர் வெளிச்சத்தைப் பார்த்து நிலைகுலைந்து எதிரி மீன்களைப் பயந்து நடுங்க வைத்துவிடும். உணவு தேடவும் இந்த ஒளியே உதவுகின்றன.

ஒரு காலத்தில் கிரேக்கர்கள் இந்த மின்திருக்கை மீன்களைப் பிடித்து அதன் மின் அதிர்வலைகளைப் பயன்படுத்தி தலைவலிக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com