மாட்டுத்தலை சங்கு

மன்னார் வளைகுடாவில் அதிகமாக காணப்படும் உயிரினங்களில் ஒன்று மாட்டுத்தலைச் சங்கு. இவ்வகை சங்குகள் மிக வேகமாக அதன் எண்ணிக்கையில் குறைந்து கொண்டே வருகின்றன. இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்
மாட்டுத்தலை சங்கு
Updated on
1 min read

மன்னார் வளைகுடாவில் அதிகமாக காணப்படும் உயிரினங்களில் ஒன்று மாட்டுத்தலைச் சங்கு. இவ்வகை சங்குகள் மிக வேகமாக அதன் எண்ணிக்கையில் குறைந்து கொண்டே வருகின்றன. இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியது.

சங்குகளைக் கடலின் அடியில் மூழ்கிச் சென்று சேகரிப்பதைச் "சங்கெடுப்பு' என்று அழைப்பார்கள். இதனை "சங்கு குளித்தல்' என்றும் அழைக்கிறார்கள். சங்கு குளிப்பவர்கள் பல குழுக்களாகச் சேர்ந்துகொண்டு, படகுகளில் சென்று சங்குகளைச் சேகரிக்கின்றனர்.

சங்கு குளிப்பது இப்போது இல்லையென்பதால் கடலுக்கடியில் கூட்டம், கூட்டமாக உள்ள சங்குப்படுகைகளில் மீனவர்கள் இழுவலைகளால் இச்சங்கை சேகரிப்பதாலும், ஆலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகளாலும் இவ்வினம் மிக வேகமாக அழிந்து கொண்டே வருகிறது. எனவே அரசு இச்சங்குகளைச் சேகரிக்கத் தடை விதித்துள்ளது. அகில உலக இயற்கை நிறுவனம் இச்சங்கினை ஒரு முக்கிய உயிரினமாகவே அறிவித்திருக்கிறது. சங்குகளிலேயே மிகப்பெரிய வடிவில் இருப்பதாலும், சட்டெனப் பார்ப்பதற்கு இச்சங்கு மாட்டுத் தலையைப் போலவே இருப்பதால் இதனை மீனவர்கள் "மாட்டுத்தலைச் சங்கு' என்கிறார்கள்.

இதன் அடிப்பகுதி தட்டையாகவும், அகலமாகவும் இருக்கும். இவை மற்ற சங்குகளைக் காட்டிலும் கடினமானதாகவும், வெண்மை நிறமாகவும் இருக்கும். இதன் கீழ்ப்பகுதியில் பழுப்பு கலந்த புள்ளிகள் காணப்படும். இச்சங்குகள் பொதுவாக 35 செ.மீ.வரை நீளம் உடையதாகவும் இருக்கிறது. பெண் இனம் ஆணைக் காட்டிலும் அளவில் பெரியதாக இருக்கும். இதன் விலங்கியல் பெயர் "காஸிஸ் கார்னூட்டா'.

ஆங்கிலத்தில் "கிங் ஷெல்' என்றும் அழைக்கப் படுகிறது.

கடலுக்கடியில் பவளப்பாறைகள் நிறைந்த மணற்பாங்கான பகுதி மற்றும் பவளப்பாறைகளின் உடைந்த துகள்கள் இருக்கும் இடங்களில் இவ்வகைச் சங்குகள் வசிக்கின்றன. நட்சத்திர மீன்கள், கடல் குச்சிகள் எனப்படும் கடல் முட்தோலிகள் போன்றவையே மாட்டுத்தலைச் சங்கின் விருப்ப உணவாகும்.

நீளமான மற்றும் தட்டை வடிவத்திலும்,உருண்டையாகவும்,சிறிய கொம்பு வடிவத்திலும் இதன் முட்டைகள் பல வடிவங்களாக இருக்கின்றன.

இச்சங்கு ஒரு கொம்பில் உள்ள விஷத்துடன் கூடிய கொடுக்கின் மூலம் எதிரி களை மயக்கமடையச் செய்து அவற்றைச் சாப்பிட்டு விடுகின்றன. இந்த உயிரினத்தையும் தகுந்த முறையில் பாதுகாப்பது நமது கடமை'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com