வில்லுப்பாட்டால் விழிப்புணர்வு

ஓவியர்,ஆன்மீக சொற்பொழிவாளர், வில்லிசைக்கலைஞர், மரப்பொம்மைகள் செய்யும் சிற்பி, ஹார்மோனியக் கலைஞர் என பல்கலை வித்தகராகவும் இருந்து வருகிறார் எம்.அண்ணாமலை.
வில்லுப்பாட்டால் விழிப்புணர்வு
Updated on
1 min read

ஓவியர்,ஆன்மீக சொற்பொழிவாளர், வில்லிசைக்கலைஞர், மரப்பொம்மைகள் செய்யும் சிற்பி, ஹார்மோனியக் கலைஞர் என பல்கலை வித்தகராகவும் இருந்து வருகிறார் எம்.அண்ணாமலை.

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் இந்திரா நகரில் வசித்து வரும் இவர் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான வில்லிசை மூலம் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக 200-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். புராணக்கதைகளை வில்லிசை மூலம் நகைச்சுவையாகவும்,தனது சிம்மக்குரலால் பாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

எம்.அண்ணாமலையை சந்தித்து பேசினோம்: 

""இருபது வயதில் எனக்கு மிருதங்கம் வாசிக்க ஆசை வந்தது.நாடகங்கள் நடைபெறும் போது முன்னாடி உட்கார்ந்து நான் மிருதங்கம் வாசிப்பதை மக்கள் பார்த்து கைதட்டணும்.. அதனால் காஞ்சிபுரம் முத்துகணேசன் என்பவரிடம் மிருதங்கம் வாசிக்க கற்றுக் கொண்டேன்.

அதை முழுமையாக கற்றுக் கொண்ட பிறகு என் ஆர்வம் ஹார்மோனியத்தின் மீது திரும்பியது.ஹார்மோனியக் கலைஞர் கரந்தை சீத்தாராமனை எனது குருவாக ஏற்றுக்கொண்டு எனது 21-ஆவது வயதில் ஹார்மோனியமும் கற்றுக்கொண்டேன். இவரது தம்பி கரந்தை தாமோதரன் தமிழிசை பாடகராகவும் இருந்து வந்தார்.இவரிடமும் 25 ஆண்டுகள் தொடர்ந்து ஹார்மோனியக் கலைஞராக பணியாற்றினேன்.

வில்லிசைப் பாடல்களை பாடும் வித்தைகளை முத்துகணேசன் மூலமாக தெரிந்து கொண்டு தற்போது தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லுப்பாட்டு மூலம் புராணக்கதைகளை பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறன்.இதுவரை 200-க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன்.

ஒரு தனிப்பட்ட கருத்தை மையமாக வைத்து வில் அடித்து, பாட்டுப்பாடி, கருத்துக்களை சொல்லி, அந்தக் கருத்தையும் நகைச்சுவையாக சொல்லும் போது எந்தத் தலைப்பாக இருந்தாலும் எளிமையாக மக்கள் மனதில் பதிந்து விடும். தரிசு நிலங்களை எவ்வாறு மேம்படுத்தி பொன்விளையும் பூமியாக மாற்றலாம் என்ற எனது வில்லுப்பாட்டு மிகவும் பிரபலம்.இதனை அரசு நிகழ்ச்சியாகவும் பல்வேறு இடங்களில் நடத்தியுள்ளேன்.

வள்ளி திருமணம், மீனாட்சி கல்யாணம்,காமாட்சியம்மன் மகிமை, காரைக்கால் அம்மையார்,சூரசம்ஹாரம்,விநாயகர் பெருமைகள், ராமாயணம்,மகாபாரதம் உள்பட ஏராளமான தலைப்புகளில் வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.

நகரங்களை விட கிராமத்து மக்களிடம் வில்லுப்பாட்டுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. தமிழக அரசின் கலைச்சுடர்மணி விருது கிடைத்துள்ளது. வில்லிசைக்கலை அழிந்து விடக் கூடாது.

இது தமிழர்களின் பாரம்பரியக்கலைகளில் ஒன்று என்பதால் குறைவான கட்டணமே பெற்றுக்கொண்டு வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அரசு இக்கலையை பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை'' என்றார் எம்.அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com