

பிறப்பிலேயே இரண்டு கைகள் இல்லாமல், ஒரு கால் வளர்ச்சியில்லாமல் பிறந்த முகம்மது ஆஸிம், பெரியார் ஆறில் ஒரு கி.மீ நீந்தி சாதனை புரிந்திருக்கிறார்.
சென்ற ஆண்டு (2021) நெதர்லாந்தில் நடந்த குழந்தை மேதைக்கான நோபல் பரிசு வழங்குவதற்கான பரிசீலனைக்கு 169 பேர்கள் மனு செய்திருந்தனர். அதில் மூன்றாவது இடத்தை ஆஸிம் பெற்றிருந்தார்.
15 வயது ஆஸிம் தனது சாதனைக் கதையை நம்மிடம் பகிர்ந்தார்:
""கேரள மாநிலம் கள்ளிக்கோட்டைக்கு அருகில் இருக்கும் வெளிமன்னா தான் எனது சொந்த கிராமம். அப்பா . முஹம்மது ஷஹீத், அம்மா ஜம்ஸினா. நான் கருவில் இருந்த போதே வளர்ச்சியில்லாமல் இருக்கிறேன்... அதனால் கருவைக் கலைத்துவிடுவதுதான் நல்லது என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்ல, பெற்றோர் ஒத்துக் கொள்ளவில்லை. பத்து மாதம் கழித்து கைகள் இல்லாமல், ஒரு கால் ஊனத்துடன் பிறந்தேன்.
அதுமட்டுமில்லை... தலை மிகவும் பெரியதாகவும், முகத்தில் சீரான எலும்பு வளர்ச்சி இல்லாத காரணத்தால் வாய் - தாடை சரிவர இயங்காமலும் இருந்ததால் தாயிடம் பால் குடிக்கும் சக்தி கூட என்னிடம் இல்லாமல் இருந்ததாம். புட்டிப் பால் புகட்டி வளர்த்தார்களாம். இடதுகால் மட்டும் வளர்ந்தது. ஒரு காதுக்கு கேட்கும் சக்தி இல்லை. தாடை, ஈறு, பற்கள், நாக்கு எல்லாம் குறைபாடுடன் இருந்தன. என்னைப் பரிசோதித்து 90 சதவீத உடல் குறைவு உள்ளது என்று மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். ஒரு காது கேட்பதால் பேசும் சக்தி தானே வந்துவிட்டது. ஐந்து வயதானதும் வீட்டில் ஆசிரியர்களை வரவழைத்து பாடங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். இரண்டாம் வகுப்பு வரை வீட்டிலேயே படித்தேன். வளர்ச்சி பெற்ற இடது காலால் எழுதப் பழகினேன்
பள்ளியில் ஆசிரியராக இருந்த காதர் என்பவர் ஆஸிம் மற்ற குழந்தைகளை போல பள்ளிக்கு வந்து படிக்க வேண்டும். அப்போதுதான் ஆஸிமின் படிக்கும் திறனும், இதர திறமைகளும் வளரும். இல்லையென்றால் ஆஸிம் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடைக்க வேண்டியிருக்கும்' என்று பெற்றோரிடம் எடுத்துச் சொன்னார். அதனால் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினேன். ஆனால் சக்கர நாற்காலியில் அமர்ந்து பள்ளிக்குச் செல்வது, வகுப்பில் பெஞ்சில் ஏறி அமர்வது உடல் ஊனமுற்ற எனக்கு ரொம்பச் சிரமமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் சென்று வருவது மிகப் பெரிய சவாலாக அமைந்தது. எனது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எனது நண்பர்கள் ஆனார்கள்.
ஆசிரியர்கள், சக நண்பர்கள் எனக்கு உதவினார்கள். எனது ஊரில் இருக்கும் பள்ளியில் நான்காம்வகுப்புவரை மட்டும்தான் வகுப்புகள் இருந்தன.ஐந்தாம் வகுப்பு படிக்க பக்கத்து ஊருக்குப் போக வேண்டும். சக்கர நாற்காலியில் அவ்வளவு தூரம் என்னால் போய்வர முடியாது. அதனால் எனது ஊரிலுள்ள பள்ளியை தரம் உயர்த்தி எட்டாம் வகுப்புவரை படிக்கும் வசதியுள்ளதாக ஆக்க வேண்டும் என்று அன்றைய முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அவர் எனது நிலைமையைப் புரிந்து கொண்டு நான் படித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் பள்ளியின் தரம் உயர்த்த ஆணை பிறப்பித்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்க வழியின்றி ... தவித்த நான் பல கதவுகளைத் தட்டினாலும் பலனில்லை.
உள்ளூர் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்ற மாவட்டப் பஞ்சாயத்திலும் கிராமப் பஞ்சாயத்திலும் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு கோரிக்கை வைத்தனர். முதலமைச்சர், நிதியமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து எனது சார்பாகவும் அவர்கள் சார்பாகவும் கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்தார்கள். பலன் இல்லை. ஊர் மக்கள் ஆஸிமிற்காக மட்டும் இந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக மாற்றக் கேட்கவில்லை சுற்றுவட்டார கிராம பிள்ளைகளுக்காகவும், பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். வேறு வழியில்லாமல் கேரள உயர்நீதி மன்றத்தை அணுக முடிவு செய்தேன்.
சமூக ஊடகங்களில் எனது அவலம் பரவலாக்கப்பட்டது. பள்ளியின் தரத்தை உயர்த்த தில்லி சென்று மனித உரிமை ஆணையம், குழந்தைகள் நல அமைப்பையும் நேரில் கண்டு எனது கோரிக்கைகளை சமர்ப்பித்தேன். முன்பின் பரிச்சயம் இல்லாத சமூக ஊடக பயன்பாட்டாளர்களின் உதவியோடு கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். நான் படிக்கும் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக மாற்ற தீர்ப்பானது. என்னால் தத்தி தத்தி நடக்க முடியும். நேராக நிமிர்ந்து நிற்க முடியாது. வலது பக்கம் சரிந்துதான் நிற்க முடியும்.
நீந்துவதற்கு கைகள் முக்கியத் தேவை என்றாலும், மனதில் துணிவு இருந்தால் கைகள் இல்லாமலும் நீந்தலாம் என்று ஆலுவா பகுதியில் ஓடும் பெரியாறு ஆற்றில் நீந்தி சாதனை படைத்தேன். 30 அடி ஆழமுள்ள பெரியார் ஆற்றில் சுமார் 1 கி.மீ தூரத்திற்கு மல்லாந்தபடி கால்களால் உந்தி உந்தி நீந்திச் சென்றேன். நீச்சல் பயிற்சியாளர் சஜி வாளச்சேரி எனக்கு இரண்டே வாரத்தில் நீச்சல் பயிற்சி கற்றுக் கொடுத்து இந்த சாதனையை நிகழ்த்தச் செய்தார். இந்த சாதனையை கேரளத்தின் எல்லா ஊடங்கங்களும் பாராட்டின'' என்கிறார் ஆஸிம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.