

சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் "எல்லோ கிராஸ்' என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார் அன்பழகன். விபத்து இல்லாமல் வாகனங்களை செலுத்துவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பல்லாயிரக்கணக்கான ஓட்டுநர்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். தொடர்ந்து இந்த பயிற்சியை அளித்து வருகிறார். அன்பழகனுக்கு நன்கு அறிமுகமான ஒரு கார் ஓட்டுநரின் மகன் பெயர் வெங்கடேஷ். நாகப்பட்டினத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் எம்.சி.ஏ 2 -ஆம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவனுக்குகல்லூரி கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் சேர்த்து மொத்தம் 30 ஆயிரம் கட்ட வேண்டி உள்ளதாக தெரிவித்தார். மாணவனின் தாயார் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு போய் வருகிறார். கஷ்டமான குடும்ப சூழ்நிலை. இந்தக் கட்டணத்தை கட்ட முடியாவிட்டால் மாணவனின் படிப்பு பாதியிலேயே நின்றுவிடும். உதவும்படி கேட்டுக்கொண்டார். தொகை பெரிதாக இருந்ததால் கொஞ்சம் மலைப்பாக இருந்தது. முயற்சி எடுத்து பார்ப்போம் என்று முடிவு செய்தேன்.
சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரிடம் பேசி, இரண்டு மாதம் அவகாசம் கொடுங்கள் கட்ட முயற்சிக்கிறோம் என்றேன். மாணவன் படிப்பதில் ஏற்பட்டிருந்த தடை பிரச்னை தற்காலிகமாக தீர்ந்தது என்றாலும் நிரந்தர தீர்வுக்காக நண்பர்களிடம் இந்த பிரச்னையை பகிர்ந்தேன். எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி கொண்டிருப்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எங்களுடன் இணைந்து பல்வேறு ஏழை, எளிய மக்களுக்கு உதவி கொண்டிருப்பவருமான நண்பர் சோலைராஜ் தற்போது ராஜஸ்தானில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சாத்தூர்.
சோலைராஜின் முயற்சியின் விளைவாக , தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் இந்திராணி மற்றும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவருடைய மகன் சபரி மாணவருக்கு செலுத்த வேண்டிய தொகையை தர முன்வந்தனர். அந்தத் தொகை சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவர் பெயரில் வரவு வைத்துக்
கொள்ளப்பட்டது என தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் வெங்கடேசன். அவரிடம் தொடர்ந்து பேசினோம்:
""சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கவிஞர் கற்பகம். இவர் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகை. எல்லாவற்றுக்கும் மேலாக மிகச் சிறந்த மனித நேயம் கொண்டவர். கரோனா ஊரடங்கு காரணமாக நம் சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டு மனம் பதைபதைத்து இயன்ற உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகிறார்.
அண்மையில் திருவள்ளூர் அருகே உள்ள இருளர் பழங்குடி மக்கள் வசிக்கும் காந்தி கிராமத்திற்கு நாம் சென்று அவர்களின் வாழ்க்கை நிலை குறித்து அறிந்தோம். சில வீடுகளுக்கு மின்சார வசதி கூட இல்லை, அவ்வீடுகளில் வசிக்கும் மாணவிகள் படும் கஷ்டங்களைகற்பகத்திடம் பகிர்ந்தோம். மிகவும் நெகிழ்ச்சி அடைந்த அவர்,அந்த வீடுகளில் வசிக்கும் மாணவிகள் 5 பேருக்கு புத்தாடைகள் வழங்கினார்.
கோவை சத்தியமங்கலத்தைச் சேர்ந்த நான்கு மாற்றுத்திறனாளிகள் வீல் சேர் வேண்டும் என்ற கோரிக்கையுடன் எங்களை அணுகினர். இதை அறிந்ததும் நண்பர் பாலசுப்ரமணி மூலமாக நான்கு வீல் சேர் வாங்க நிதி கிடைத்தது. அந்த நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கும் வீல் சேர் வாங்கி அன்பளிப்பு செய்தோம்.
திருவல்லிக்கேணியில் செயல்படும் முதியோர் காப்பகத்தில் இருந்து உதவி கேட்டிருந்தனர். அங்கு வசித்து வரும் ஐம்பது முதிய பெண்மணிகளுக்கு உடுத்த புடவையும் சாப்பிட உணவும் வாங்கிக் கொடுத்தால்மிகவும் உதவியாக இருக்கும் என்று அந்த நிர்வாகத்தினர் தெரிவித்தனர். நண்பர்கள் பலரின் உதவியுடன், காப்பகத்தில் வசிக்கும் 50 பெண்களுக்கு புடவைகள் மற்றும் இரவு உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து இரவு உணவை உண்டோம். பெற்றெடுத்த வாரிசுகளால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட வயதான பெண்மணிகள் தங்கள் சோகக் கதைகளைக் கேட்டபோது நாங்களும் கண்கலங்கினோம். பெற்றெடுத்தவர்களை கைவிடாதீர் - கை கொடுங்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.