நாட்டு மக்கள்தான் முக்கியம்!
மன்னர்களின் புகழுக்குக் கொடையே முக்கியம் என்று பேச்சாளர் ந.விஜயசுந்தரி பட்டிமன்றத்தில் பேசியது, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.


மன்னர்களின் புகழுக்குக் கொடையே முக்கியம் என்று பேச்சாளர் ந.விஜயசுந்தரி பட்டிமன்றத்தில் பேசியது, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான் நூற்றாண்டு விழாவையொட்டி, ""மன்னர்களின் புகழுக்குக் காரணம் புகழும் கொடையும்'' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் தலைமை தாங்கினார்.
"கொடை' என்ற தலைப்பில் திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியின் தமிழாய்வுத் துறைத் தலைவரும் பட்டிமன்றப் பேச்சாளருமான ந.விஜயசுந்தரி பேசியதாவது:
""தஞ்சாவூர் பெரிய கோயில். திருச்சுற்று பிரகாரம். விளக்குகள் எல்லாம் எரிந்துகொண்டிருக்கின்றன. ராஜராஜ சோழன் பெருமிதத்தோடும், வீரத்தோடும் சுற்றிப் பார்க்கிறான்.
எல்லா விளக்குகளும் கொழுந்துவிட்டு எரிகின்றன. ஒரே விளக்கு மட்டும் அணைந்து கிடக்கிறது. நெய் இல்லை. திரி கரிந்து போயிருந்தது. உடனே ராஜராஜ சோழன் கோபமுற்றான்.
""யாரங்கே?'' என்று கேட்டான்.
அங்கு வந்த பணியாளர்களிடம், ""ஏன் இந்த விளக்கு மட்டும் எரியவில்லை'' என்றான் கோபத்துடன்..
அதற்கு, ""இந்த விளக்கு எழுவத்தூர் மாறாயனுக்காக, நேர்ந்துவிடப்பட்டுள்ளது. நெய் ஒரு மாதமாக, அவன் கொண்டு வரவில்லை. அதான் எரியவில்லை?. தேடிப் பார்த்தோம். ஆளில்லை'' என்றனர்.
உடனே ராஜராஜ சோழன் கோபமுற்று தேரை அழைத்தான். உடனே எழுவத்தூருக்குப் புறப்பட்டு சென்றான். மாறாயனின் குடிசை வீட்டுக்கு முன்பாக தேர் நின்றது.
""எழுவத்தூர் மாறாயா வா இங்கே..'' பெயர் சொல்லி குரலிட்டாள். 5 நிமிடங்கள் கழித்து, ஒரு பெண் நாராய் கிடந்த குழந்தையை வாரி அணைத்தபடியே வெளியே வந்தாள்.
ராஜராஜ சோழன், ""எங்கே மாறாயன்'' என்று கேட்டான்.
அதற்கு அந்தப் பெண்ணோ, ""மகாராஜா.. என் பெயர் வரகுணாள். கடந்த மாதம் வந்த காவிரி ஆற்று வெள்ளத்தில் தாங்கள் அவருக்கு அளித்த 40 பசு மாடுகளும், என் புருஷன் மாறாயனும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. அவரும் இறந்துவிட்டார். ஒரு மாதமாகிவிட்டது. இப்போது நானும் என் இந்தப் பிள்ளையும்தான்இருக்கிறோம்'' என்றாள்.
அதிர்ந்து போனான் ராஜராஜ சோழன்.
""அப்படியா ஒரு மாதம் ஆகிறதா? உன் கணவன் இறந்து...? அது சரி பெரிய கோயிலில் 23 நாள்கள் விளக்குகள் எரிந்தன. 7 நாள்கள் மட்டுமே விளக்குகள் எரியவில்லை. கணவர் இறந்த பின்னரும் எப்படி விளக்கு எரிந்தது'' என்றான் மன்னன்.
அதற்கு அந்தப் பெண்ணோ கண்ணீர் விட்டுக் கதறினாள். மன்னனின் காலில் விழுந்து அழுதாள், புரண்டாள். பின்னர் அவள், ""வெட்கத்தைவிட்டு சொல்கிறேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் 23 நாள்களாகத் தாய்ப் பாலை விற்று, அதில் கிடைத்த பணத்தில் நெய் வாங்கி விளக்கேற்றினேன். இந்த ஒரு வாரமாகத்தான் ஏற்ற முடியவில்லை'' என்றாள்.
அதிர்ந்துபோய் தேரில் இருந்து இறங்கிய மாமன்னர் வீரத்துக்கு அடி பணியவில்லை. ஓடிவந்து அந்தக் குழந்தையை வாரி எடுத்துக் கொண்டு, சொன்னார்:
""கேரளாந்தகன் வாயில் எனக்குப் பெருமை அல்ல.. பிரகதீஸ்வரர் கோயில் எனக்குப் பெருமையல்ல.. இனிமேல் குஞ்சரமல்லன் கல்வெட்டுகளில் எழுத வேண்டிய ஒரே வார்த்தை- ராஜராஜ சோழன் பெயர் எங்கே எல்லாம் இருக்கிறதோ- அங்கெல்லாம் எழுவத்தூர் மாறாயன் பெஞ்சாதி வரகுணாள் பெயரும் இருக்க வேண்டும். இனி அவள் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு உண்டு. 40 பசு மாடுகளை இப்போதே எழுதி வையுங்கள். 40 மாடுகளையும் ராஜராஜ சோழன் காப்பாற்றுவான் என்றும் எழுதிவையுங்கள்'' என்றார்.
இதைப் பார்க்கும்போது, மன்னனுக்கு நாடு எப்படி முக்கியமோ, அதைப் போல நாட்டு மக்களும் முக்கியம் என்று தெரிகிறது அல்லவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...