காலை எழுந்தவுடன்..!

பாடல் ஆசிரியை,  சங்கீதத்தில் எம்.ஃபில். பட்டம்  முடித்து  முனைவர் பட்டம் பெற  உழைக்கும் மாணவி, மாலை வேளைகளில் தனிப்பயிற்சி வகுப்பு எடுக்கும் ஆசிரியை..
காலை எழுந்தவுடன்..!
Updated on
1 min read

பாடல் ஆசிரியை, சங்கீதத்தில் எம்.ஃபில். பட்டம் முடித்து முனைவர் பட்டம் பெற உழைக்கும் மாணவி, மாலை வேளைகளில் தனிப்பயிற்சி வகுப்பு எடுக்கும் ஆசிரியை.. என்று பல்வேறு திறமைகளைக் கொண்டுள்ள அனிதா, தினம்தோறும் காலையில் வீடுகளுக்கு செய்தித்தாள்கள் விநியோகிக்கும் பணியையும் செய்து வருகிறார்.

அவருக்குச் சொந்த ஊர் கொச்சி அருகேயுள்ள "உதயம்பேரூர்'. சாதனைப் பெண்ணாக இருக்கும் அவர், கேரளத்தில் பிரசித்தம்.

அவரிடம் பேசியபோது:

""என் அப்பா கேரள மின்வாரியத்தில் பணிபுரிந்தவர். எனது அம்மா ஊராட்சி மன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர். அவர்களின் ஒரே வாரிசு நான்.

அப்பா ஓய்வு பெற்றவுடன், செய்தித்தாள்களை வீடுகளுக்கு விநியோகிக்கத் தொடங்கினார். கரோனா காலத்துக்கு முன்பாக, அப்பா விபத்தில் சிக்கினார். ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஊரில் அப்பாவின் அடையாளமாகிப் போன பத்திரிகை விநியோகத்தைத் தொடர, ஒரே மகளான நான் தீர்மானித்தேன்.

அடுத்த நாளே நான் செய்தித்தாள்களை விநியோகிக்கத் தொடங்கியபோது "என்னடா! வயசுப் பெண் பேப்பர் போடுறாளே' என்று எல்லோரும் வியப்புடன் பார்த்தனர். சிலர் எதிர்க்கவும் செய்தனர். "இந்த வேலை எத்தனை நாள்களுக்கு! திருமணமானதும் செய்தித்தாள் விநியோகத்தை நிறுத்திவிடுவாய்தானே!' என்றும் கேட்டனர்.

"அதிகாலை செய்தித்தாள்கள் விநியோகத்துக்குப் போகிறேன்' என்று தெரிந்துதான் ஹரிகிருஷ்ணன் 2020 -இல் திருமணம் செய்து கொண்டார். பணியைத் தொடர்வதில் கணவருக்கும் சம்மதம்தான். மெக்கானிக்காகப் பணிபுரியும் ஹரி, செண்டை மேளத்தில் கலக்குவார். அவர் ஊரின் இன்னொரு பகுதியில் தினசரி, வார மாத இதழ்களை விநியோகம் செய்துவருகிறார்.

"குழந்தை பிறந்தால் செய்தித்தாள் விநியோகத்தை நிறுத்தித்தானே ஆகணும்' என்று கேட்கிறார்கள். சில நாள்கள் ஓய்வு எடுப்பேன். ஆனால் செய்தித்தாள் விநியோகத்தை நிறுத்தமாட்டேன். அரசு வேலைக்கு என்னைத் தயார் செய்து கொண்டிருக்கிறன். அரசு வேலை கிடைத்தாலும் செய்தித்தாள் விநியோகத்தைத்தைவிட மாட்டேன்.

பத்திரிகை விநியோகம் எனது அடையாளமாகிப் போனதால் நான் கேரளத்தில், அனைத்து ஊடகங்களில் பேசுபொருள் ஆனேன்.

தற்போது முனைவர் பட்டத்துக்காக, முத்துசாமி தீக்ஷதரின் கிருதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். தனியார் பள்ளியில் சங்கீத ஆசிரியை. மாலை வேளைகளில் வீட்டில் சங்கீத வகுப்புகளை சிறார்களுக்காக நடத்துகிறேன்.

வாய்ப்பாடு, பரத நாட்டியம் எனக்கு வரும். வயலின் , வீணை வாசிப்பேன். திருவையாறு சங்கீத ஆராதனையில் பங்கேற்று ஆலாபித்துள்ளேன்'' என்கிறார் அனிதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com