மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சாதனை விவசாயி!

செம்மை நெல் சாகுபடித் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு 14,451.25 கிலோ நெல் மகசூல் செய்து மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விருதையும் ரொக்கப் பரிசையும் வென்ற பெண் விவசாயிக. வசந்தா.

News image
Updated On :19 பிப்ரவரி 2023, 12:30 am


தமிழ்நாடு அரசின் செம்மை நெல் சாகுபடித் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு 14,451.25 கிலோ நெல் மகசூல் செய்து மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து, குடியரசு தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விருதையும் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசையும் வென்றிருக்கிறார் பெண் விவசாயிக. வசந்தா.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ப. கணேசனின் மனைவி வசந்தா. 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இருவரும் தங்களது 6 ஏக்கர் பரப்பளவுள்ள வயலில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், 2021-22-ஆம் ஆண்டுக்கான சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது வசந்தாவுக்கு கிடைத்திருக்கிறது.

விருதுக்கான போட்டியில் 38 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். 2022-ஆம் ஆண்டு ஜனவரி 24-இல் இவரது நிலத்தில் அறுவடைக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேளாண் அலுவலர்கள், பார்வையாளர்களாக கலந்துகொண்ட அறுவடையில், இரண்டரை ஏக்கர் (ஒரு ஹெக்டேர்) நெல் மகசூல் கணக்கிடப்பட்டது. 14451.25 கிலோ என இருந்தது. அதுவே மாநிலத்தின் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன்பின்னர், சென்னையில் நடைபெற்றகுடியரசு தின விழாவில், வசந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விருதையும், பரிசுத் தொகையையும் வழங்கிப் பாராட்டினார்.

இதுகுறித்து க. வசந்தா கூறியது:

""சிறுவயதிலேயே குடும்பத்தோடு சேர்ந்து விவசாயப் பணிகளை மேற்கொண்டேன். திருமணத்துக்குப் பிறகும் விவசாயப் பணிகள்தான்.

வேளாண் விரிவாக்க மையத்தில் இருந்து ஐ.ஆர். 1009 ரக நெல் விதைகளை வாங்கி 2 கிலோ அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா கலந்து நிழலில் உலர்த்தினோம். அதன்பிறகு மேட்டுப்பாத்தியில் 150 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் தயார் செய்யப்பட்டது.

அதன்பிறகு 2.50 ஏக்கர் நிலத்தில் 16 டன் ஆட்டு எரு, தொழுவுரம் இடப்பட்டு, தக்கைப்பூண்டு, சணப்பை, நவதானிய விதைகள் 60 கிலோ விதைத்து பூப்பூக்கும் தருவாயில் 45 நாள்களுக்குப் பிறகு வயலில் மடக்கி உழுதோம். அதன்பிறகு 5 கிலோ டிஏபி, 20 கிலோ ஜிப்சம், 20 கிலோ பொடித்த வேப்பங்கொட்டை கலந்து நிலத்தில் நீர்ப்பாய்ச்சி மெழுகுபதத்தில் நிலத்தை தயார் செய்த பிறகு, நாற்றங்கால் பறித்து ஒற்றை நாற்று முறையில் நடவு செய்யப்பட்டது.

பூச்சிகளைக் கட்டுப்படுத்த வரப்பில் உளுந்து, தட்டைப் பயிர்கள் பயிரிடப்பட்டன. தொடர்ந்து பூச்சித் தாக்குதலை சமாளிக்க வேப்பங்கொட்டையை அரைத்து பூச்சிக்கொல்லியாகப் பயன்
படுத்தினோம்.

பாய்ச்சலும், காய்ச்சலும் முறைப்படி நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்பட்டது. கோனோவீடர் கருவியின் மூலம் களைகள் அகற்றப்பட்டன. அறுவடைக்கு 30 நாட்கள் முன்பே வேளாண் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தோம்.

வேளாண்மை லாபகரமான தொழில் இல்லை எனப் பலரும் இத்தொழிலை விட்டுவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் சூழலில் எனக்குக் கிடைத்த இந்த மகசூலும் அதனைக் கடந்து மாநில அளவில் கிடைத்த முதலிட விருதும் மிகுந்த மகிழ்ச்சியையும் கூடுதல் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.