தனுஷின் 'இட்லி கடை', சிவகார்த்திகேயனின் 'பராசக்தி', சிலம்பரசனின் 49-ஆவது படம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களை தனது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பவர் ஆகாஷ் பாஸ்கரன். இவர் அடுத்து தயாரித்து, இயக்கும் படத்துக்கு 'இதயம் முரளி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அதர்வா, பிரக்யா நாக்ரா, கயாது லோஹர், ஜொனிடா காந்தி, நிஹாரிகா, ப்ரீத்தி முகுந்தன், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ரமணகிரிவாசன், ஆகாஷ் பாஸ்கரன், திராவிடச் செல்வம் ஆகியோர் வசனம் எழுதுகின்றனர். இதன் டைட்டில் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அண்மையில் நடந்தது.
நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் மத்தியில் படத்தின் டீசர் காட்சிகள் வெளியிடப்பட்டன. இவ்விழாவில் நடிகர் அதர்வா பேசும்போது, ''ஒரு தலைக் காதல் எப்போதும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். அதை கடந்து வர முடியாத ஆண், பெண் இருக்கவே முடியாது. இந்த நிமிடத்தில் கூட ஒருவன் காதல் வயப்பட்டிருப்பான். ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு பெண் தன் காதலனுக்காக காத்துக் கொண்டிருப்பாள். அதுதான் காதல். அது நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
என் அப்பாவின் கொண்டாடப்பட்ட டைட்டில் 'இதயம்'. என்னுள்ளும் இதயம் முரளி இருக்கிறான். எல்லோருக்குள்ளும் இருக்கிறான். அதைக் கொண்டாடும் வகையில் அழகான காதல் படமாக இது இருக்கும். ஆகாஷ் பெரிய தயாரிப்பாளர். அவரை இயக்குநராகத்தான் தெரியும்.
இந்தக் கதையை 2017-ஆம் ஆண்டு சொன்னார், அப்போது அது நடக்கவில்லை, பின்பு தயாரிப்பாளராக மாறிவிட்டார். இப்போது இந்தப் படம் படப்பிடிப்பில் இருக்கிறது. மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக இது நல்ல படமாக இருக்கும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.