ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பாண்டுரங்கன் தயாரித்து வரும் படம் 'குற்றம் தவிர்'. கதை, திரைக்கதை, வசனம் எழுதி கஜேந்திரா இயக்குகிறார். ரிஷி ரித்விக் கதாநாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்கின்றனர்.
சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு, செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய், சாய்தீனா, மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... 'நம் கண் முன்னே கொட்டிக் கிடக்கிற மனித வாழ்க்கைதான் இந்தப் படத்துக்கான வடிவம்.
நீங்கள் எப்படி நினைத்தாலும் கதை, அப்படியே அதை பேசும். ஒரு சினிமா 2 மணி நேரம்தான், ஆனால் ஒவ்வொரு வாழ்க்கையும் 24 மணி நேரம். வாழ்க்கைதான் இங்கே யோசிக்கவே முடியாத சினிமா. உங்களை கடந்து போகிற ஒவ்வொரு எளிய மனிதனும் இந்த சினிமாவில் தென்படுவான். ஒரு காதல், ஒரு சம்பவம், ஒரு பிரச்னை.. என எதையும் இந்தக் கதையில் முன்னிலைப்
படுத்தி பார்க்க முடியாது. அப்படி பார்த்தால் அதை சுற்றியிருக்கிற மனிதர்களை விட்டும் அகல முடியாது. எழுதுவதும், பேசுவதும், சினிமா எடுப்பது சந்தோஷத்துக்காக மட்டுமேதான். சக மனிதர்களின் அன்பும், அரசியலும்தான் இங்கே மூலதனம். சில சமானியர்களின் குறிப்புகள் என்று கூட இதைச் சொல்லலாம். ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம்.
இங்கே குற்றம் என்பது நம்பிக்கை துரோகம். அந்த துரோகத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்திக் கொள்ள அல்ல என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் என்னவாகும். இதுதான் களம்.'' என்றார் இயக்குநர்.