பலருக்கு பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், பணம் இல்லையே என்று நினைத்து, ஒதுங்கி விடுவார்கள். இருப்பினும், சேவை செய்ய பணம் தேவையில்லை. மனம் இருந்தாலே போதும்' என்கிறார் சமூக ஆர்வலர் சங்கர்கணேஷ்.
ராஜபாளையம் பூபால்ராஜாபட்டி தெருவைச் சேர்ந்த ராமசாமி-லட்சுமி அம்மாளின் மகனான சங்கர்கணேஷ், பரிசுப் பொருள்கள் விற்பனை செய்வதை பகுதி நேரமாகவும், சமூக சேவையை முழு நேரமாகவும் மேற்கொண்டு வருகிறார்.
அவரிடம் பேசியபோது:
பெரும் தொழிலதிபர்கள், பணம் படைத்தவர்கள் என எத்தனையோ பேர் சேவை செய்வதைப் பார்க்கும்பொழுது, நானும் அதுபோன்று சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதேசமயம், பணம் இல்லாத நிலையில், என்னால் சேவை செய்ய முடியுமா? என்ற சந்தேகமும் எழுந்தது.
ஒருமுறை பெரிய அளவிலான கபடி போட்டி நடைபெற்றபோது, பலர் பரிசுப்பொருள்களை வழங்கினர். சிலர் பதக்கங்களை வழங்கினர். சிலர் உணவுக்கான பணத்தை வழங்கினர். அப்பொழுது கபடியில் பங்கேற்க வந்திருந்த நூற்றுக்கணக்கானோருக்கு உணவு பரிமாற உரிய ஆள்கள் இல்லாமல் இருப்பதைப் பார்த்தேன். நான் உணவு வழங்கும் பணியை செய்தேன். பலரும் பாராட்டினர். உடல் உழைப்பால் சேவையாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டது.
இலவச மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாம், ரத்த தான முகாம் என எந்த ஒரு பொது நிகழ்ச்சியாக இருந்தாலும், அதை எந்த அமைப்போ, கட்சியோ, நிறுவனமோ நடத்தினாலும் அதில் நானாக முன்வந்து சேவை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்குத் தேவையான உதவிகளை செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளேன். இதற்காக நான் யாரிடமும் பணம் பெறுவதில்லை. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்களுடைய திறமையால் அரசுப் பணியிலோ, உயர் கல்வி நிறுவனங்களிலோ சேருவது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி, பலர் வேலைவாய்ப்புகளைப் பெற வழிகாட்டியுள்ளேன். கிராமப்புற அளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் இதற்கு அதிக முக்கியவத்துவம் கொடுத்துச் செயலாற்றி வருகிறேன்.
மதுரை காந்தி அருங்காட்சியகம் சார்பில் மகாத்மா காந்தி சென்ற இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதைப் பயன்படுத்தி காந்தியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தேன். விவசாயிகளின் உழைப்பும், வியர்வையும் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக மிதிவண்டி பேரணியை நடத்தியுள்ளேன்.
தேசத் தலைவர்கள் குறித்து இளம் தலைமுறையினர், மாணவர்கள் அறியவேண்டும் என்பதற்காக, அவர்களின் பிறந்த நாளன்று மாணவர்களைச் சந்தித்து, தேசத்தலைவர்கள் குறித்து கேள்வி கேட்டு பரிசு வழங்கி வருகிறேன்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வழங்கிய சிறந்த சமூக சேவகருக்கான விருது, இந்திய மகளிர் சேவை நாயகன் விருது உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளேன்' என்கிறார் சங்கர்கணேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வடமேற்கு தில்லியில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை நடத்தி வந்த 3 சிறாா்கள் உள்பட 6 போ் கைது

சேலம் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீா் சேவை மையம்

மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்: அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கருத்து





