மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்

தொல்காப்பியர் காலம் - சர்ச்சை முடிவுக்கு வருவது எப்போது? தொல்காப்பியம்  ரிக் வேதத்துக்கு முந்தையது! கருத்து - 3 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் (கி.பி.1875) அறிஞர் பர்னல் என்பவர் "இந்திய எழுத்தியல் வரலா
மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்

தொல்காப்பியர் காலம் - சர்ச்சை முடிவுக்கு வருவது எப்போது? தொல்காப்பியம்  ரிக் வேதத்துக்கு முந்தையது!

கருத்து - 3

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் (கி.பி.1875) அறிஞர் பர்னல் என்பவர் "இந்திய எழுத்தியல் வரலாறு', "ஐந்திரப் பள்ளியைச் சார்ந்த இலக்கண ஆசிரியர்கள்' என்கிற இரண்டு நூல்களை வெளியிட்டிருக்கிறார். இந்திய எழுத்தியல் வரலாறு எனும் நூலில் பிராமி முதலான இந்திய எழுத்து வடிவங்களுக்குத் தமிழே அடிப்படை என்பதை உறுதி செய்திருந்தார்.  ஐந்திரப் பள்ளியைச் சார்ந்த இலக்கண ஆசிரியர்கள் (ஐய் பஏஉ அஐசஈதஅ நஇஏஞஞக ஞஊ நஅசநஇதஐப எதஅஙஙஅதஐஅசந) என்ற, நூலில், ஐந்திரம் என்பது ஒரு சிந்தனைப்பள்ளியே தவிர அது ஒரு தனி மனிதரால் செய்யப்பட்ட இலக்கண நூல் அன்று என்றார். மேலும், ஐந்திரம் என்ற இலக்கண நூல் இந்திரன் என்ற கடவுளால் இயற்றப்பட்டது என்பதற்கான எவ்விதச் சான்றும் கிடைக்கவில்லை என்றும் உறுதிசெய்திருந்தார். இந்திய அறிஞர்கள் ஏ.சி.பர்னலின் கூற்றை ஒருதலையாகப் புரிந்துகொண்டு ஐந்திரம் என்பதைப் பாணினிக்கும் காலத்தால் முற்பட்ட சம்ஸ்கிருத நூலாகவே கருதிவிட்டனர்.

காஷ்மீரைச் சார்ந்த சோமதேவா என்பவர் எழுதிய  "கதாசரித சாகரம்' எனும் நூலில், வரருசிகாத்தியாயனர் நடத்திய குருகுலத்திலிருந்து விலக்கப்பட்டார் சம்ஸ்கிருத இலக்கண ஆசிரியராகிய பாணினி. சிவன் அருளைப் பெற்று  குருகுலத்துக்கு வந்து அவர்களோடு வாதம் புரிந்தார் என்றும், ஏழு நாள்கள் நடந்த அந்த வாதத்தில் பாணினி தோற்றார் என்றும், ஆத்திரமுற்ற சிவன், குருகுலம் பின்பற்றிய ஐந்திர நூல்களை எல்லாம் அழித்தான் என்றும் குறிப்பிடுகிறது.

எனவே, பனம்பாரனார் "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' எனக் குறிப்பது தொல்காப்பியர் பின்பற்றிய மெய்யியலின் அடிப்படையில் என்பதும், அம் மெய்யியல் தருக்க முறையை உள்ளடக்கியது என்பதும் தெளிவு.

ரிக் வேதத்தையும் தொல்காப்பியத்தையும் ஒப்பாய்வு செய்த எம்.சுந்தர்ராஜ், ஐந்திரத்தைத் தமிழ் இலக்கண நூலாகக் கருதினாலும், அது ரிக் வேதத்துக்கு முந்தையது என்று உறுதிசெய்கிறார். ஐந்திரம் என்பது இலக்கண நூலன்று. அது அணுவியலும் தருக்கவியலும் சார்ந்த அறிவு மரப்புக்குரியது. ஒருவேளை அதை இலக்கண நூலாகக் கருதினாலும் கூட அது ரிக் வேதத்துக்கு முந்தைய தமிழ் மரபுக்குரியது என்பதே உண்மை. ரிக்வேதம் எழுதாக் கிளவியாக வாய்மொழியாகவே வழங்கப்பட்டுவந்தது. சம்ஸ்கிருதத்துக்கு இன்றைய வரிவடிவம் அமைந்ததே மிகவும் பிற்காலத்தில்தான். எனவே, எழுத்துமுறையே இல்லாத ஒரு மொழியில் எழுத்துகள் பற்றிய இலக்கணம் எப்படி இருந்திருக்க முடியும்?

நான்மறை

அதங்கோட்டாசான் நான்மறை முற்றியவர். இந் நான்மறை என்பது நச்சினார்க்கினியர் குறிப்பிடும் தைத்திரியம், பெüடிகம், தலவகாரம், சாமவேதம் எனும் கருத்தும் அண்மைக்கால ஆய்வுகளால் மாற்றம் பெற்றுள்ளன. ரிக், யஜுர், சாம, அதர்வண என நான்காக எண்ணப்படும் முறை மிகவும் பிற்கால வழக்காகும். மாகறல் கார்த்திகேயனார், நான்மறை என்பதற்கு "மூல மறை' எனப் பொருள் கொள்வதையும் இங்கே எண்ணிப்பார்க்க வேண்டும்.

மயங்கா மரபின் எழுத்து முறைகாட்டி

பனம்பாரனாரின் பாயிரம், அறத்தைப் பரப்பும் இயல்பும், வேதப் புலமையில் தேர்ச்சியும் உடைய அதங்கோட்டாசானுக்குத் தொல்காப்பியர் "மயக்கம் தராத மரபினை உடைய தமிழ் எழுத்து முறையினைக் காட்டினார்' எனக் குறிப்பது கவனத்துடன் ஆராயத்தக்கதாகும். வேதத்தில் வல்ல அதங்கோட்டாசானுக்குத் தொல்காப்பியர் தமிழ் எழுத்து முறையைக் காட்ட வேண்டிய தேவை ஏன் வந்தது? இக் கேள்விக்கான நுட்பத்தை அறிஞர் டி.டி.கோசாம்பி தம் நூலில் "கி.மு. 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியின்போது, தென்னிந்தியாவில், ரிக் வேத பாசுரங்கள் சரியானபடி தொகுத்து ஒழுங்கு செய்யப்பட்டதுடன் எழுத்து வடிவம் பெற்றுக் குறிப்புரையும் வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் ரிக்வேத மூலத்தைச் செவிவழியே கேட்டு அப்படியே அசை உச்சரிப்புடன் ஒப்பிக்கும் வழக்கமே இருந்தது... ஆனால், பொதுவாக இது எழுத்து வடிவத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்படவில்லை' எனக் குறிக்கிறார்.

ரிக்வேதம் கி.மு. 14-ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டு எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்டது தென்னாட்டில்தான் எனும் டி.டி.கோசாம்பியின் கூற்றைப் பனம்பாரனாரின் "மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி' என்ற கூற்றோடு எப்படிப் பொருத்திப் பார்க்காமல் இருக்க முடியும்?

வேதத்தை உச்சரிக்கும் முறை

அதங்கோட்டாசான் வேதம் வல்லவராதலால் வேதத்தை ஒலிக்கும் உச்சரிப்பு முறையை எடுத்துக்காட்டி, அந்த உச்சரிப்பு முறைக்கும், தமிழ் எழுத்துக்களுடைய பிறப்பிடம், அவற்றின் மாத்திரை (உச்சரிக்கும் கால அளவு) ஆகியவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கக்கூடிய வகையில் இரு நூற்பாக்களை அமைத்துள்ளார்.

எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து...(நூ-102)

அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும் (நூ-103)

 இந் நூற்பாக்கள் இரண்டும் சம்ஸ்கிருத ஒலிப்புமுறை, தமிழ் எழுத்து முறைக்கு மாறானது என்பதைப் புலப்படுத்துகின்றன. தொல்காப்பியத்தில் அந்நூற்பாக்களுக்கு "வேதத்தின் ஒலிப்புமுறை பொருள் தெரியா நிலைமை ஆகலின் அவற்றுக்கு அளவு கூறமாட்டார்கள்' என்று உரையாசிரியர் இளம்பூரணர் தரும் விளக்கம் எண்ணத்தகும். இதனால், அதங்கோட்டாசான் காலத்தில் வேதம், எழுத்து வடிவைப் பெறவில்லை என்பதும், அதன் காரணமாகவே தொல்காப்பியர் மயக்கம் தராத மரபினை உடைய தமிழின் எழுத்து முறையைக் காட்டினார் என்பதும் உறுதியாகிறது.

தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையும்

வேதக் கடவுளரின் எண்ணிக்கையும்:

வேதக் கடவுள்களின் எண்ணிக்கை 33 என்பதை ரிக்வேதம், அதர்வண வேதம் ஆகியவையும் அவற்றின் வழியாகத் தோன்றிய பிரமாணங்களும் உறுதி செய்கின்றன. அவை: அம் முப்பத்தி மூன்றும் தொல்காப்பியர் குறிப்பிடும்

"உயிரும் உடம்புமாம்' எனும் நூற்பாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதை சுந்தர்ராஜ், தம் நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.

"க' எனும் மெய்யெழுத்து

ரிக்வேதக் கடவுள்களுள் ஒன்றாகக் குறிக்கப்படுவது "க' என்பதாகும். இக் கடவுளைப் பற்றிய வரலாறு தெரியாமல் அறிஞர்கள் குழம்பியுள்ளனர். (இராகுலசாங்கி ருத்தியாயன், ரிக்வேதகால ஆரியர்கள்) பிரஜாபதியாகக் கருதப்படும் "க' என்பது தமிழ் உயிர்மெய் எழுத்தான "க'வேயாகும். சங்க காலத்தில் "க' என்பது இவ்வாறு எழுதப்பட்டது. இவ்வடிவத்தையே மனித உருவிலிருக்கும் "க' வே என ரிக்வேதம் போற்றுவதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

இந்திரனும் வருணனும்

ரிக்வேதத்தில் இரட்டைக் கடவுளராகக் குறிக்கப்படுபவர்கள் இந்திரனும் வருணனும் ஆவர். இருவருள்ளும் இந்திரனே போர்க் கடவுளாகவும் மழைக் கடவுளாகவும் போற்றப்படுகிறான். ஏறத்தாழ தலைமைத் தெய்வமாக வணங்கப்படும் இந்திரன், ரிக்வேதத்தின் இடைப்பகுதியில் அறிமுகமாகித் திடீரெனக் காணாமல் போய்விடுகிறான். இவ்வாறு இந்திரன் புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் பெரும் புதிராக இருப்பதாக அறிஞர் அம்பேத்கர் குறிப்பிடுவார்.

தொல்காப்பியர், இந்திரனையும் வருணனையும், மருத, நெய்தல் திணைகளின் கடவுள்களாகப் போற்றுவார். தொல்காப்பியர் குறிப்பிடும் அதே பொருளிலேயே அதாவது, மழைத் தெய்வமாக இந்திரனும், கடல் தெய்வமாக வருணனும் குறிக்கப்படுவதைப் போலவே ரிக்வேதமும் அவர்களைப் பற்றிக் குறித்துள்ளது. இவை எல்லாவற்றையும்விட ரிக்வேதம் இந்திரனையும் வருணனையும் அசுரர்களாகவே (ரிக்வேதம் முதல் மண்டலம் 174-1:7036:2) குறித்துள்ளதும் எண்ணத்தகும்.

ஆறு பருவங்கள்

ரிக்வேதத்தில் பதின்மூன்று மாதங்கள் கொண்ட ஆண்டுமுறை ஒன்றும், பன்னிரண்டு மாதங்கள் கொண்ட ஆண்டுமுறை ஒன்றுமாக இரண்டு வகையான ஆண்டுமுறைகள் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பருவங்களையும் கொண்ட ஆண்டுமுறை தமிழர்களிடமிருந்து ரிக்வேதம் கடன் கொண்டது என்பதை ரிக்வேத ஆராய்ச்சியாளரான கிரிஃபித் உறுதி செய்துள்ளார். ரிக்வேதத்தில் பொருள் தெரியாத பல சொற்களுக்கும் தமிழே மூலமாக இருப்பதை அக்கினி கோத்திரம் தாத்தாச்சாரியர் தெளிவுபடுத்தியுள்ளார். ரிக்வேதம் எனும் பெயரில் உள்ள முதல் எழுத்தான "ரி' தமிழின் சிறப்பெழுத்துகளில் ஒன்றான (ற) "றி' எனும் எழுத்தின் திரிபே என்பார் எம்.சுந்தர்ராஜ். ரிக்வேதம் தமிழியற் சூழலிலேயே தொகுக்கப்பட்டது என்பது தெளிவாகும். இக் கருத்தை,

தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள்தாம் மாறுவேடம் அணிந்தோ அல்லது முகமூடி போட்டுக்கொண்டோ ரிக்வேதத்தில் உள்ளன என்பதற்கு நாம் வெளிப்படையான சான்றுகளைக் கொண்டுள்ளோம்...

சம்ஸ்கிருத மொழியும் அதன் இலக்கிய மரபுகளும் தமிழியத்தையே அடிப்படையாகக் கொண்டவை. இதன் விளைவாக ஒரு கலப்பு மொழி தோற்றம் கொண்டது. அதைத்தான் நாம் இப்போது சம்ஸ்கிருதம் என்று அழைக்கிறோம். இந்த மொழியில் அமைந்த இலக்கியங்களுக்கு உரிய உள்ளடக்கத்தை வழங்கிய ஆசிரியர்கள் அனைவரும் தமிழர்களே' என வரையறை செய்வார் எம்.சுந்தர்ராஜ்.

ரிக்வேதத்தில் தமிழியக் கூறுகள் மிகுதியாக இடம் பெற்றமைக்கான காரணம், அது தென்னாட்டில் தொகுக்கப்பட்டது மட்டுமல்ல; தொல்காப்பியர் விளக்கிக்காட்டிய தமிழ் எழுத்து முறையில் அது தொகுக்கப்பட்டதே ஆகும்.

தொல்காப்பியத்தின் பழமை

ரிக்வேதம் முதன் முதலாகத் தென்னாட்டில் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டு, குறிப்புரைகளும் எழுதப்பட்டன எனவும், அக்காலம் கி.மு.14-ஆம் நூற்றாண்டு எனவும் டி.டி.கோசாம்பி கூறுவதாலும், ரிக்வேதம், தொல்காப்பியர் கூறும் எழுத்திலக்கணம் முதலான இலக்கணக் கூறுகளைத் தழுவி அமைந்துள்ளதாலும், தொல்காப்பியம் ரிக்வேதத்துக்கு முற்பட்டது என்பது தெளிவு.

கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் பிராமணங்கள், ஆரண்யங்கள், தர்ம சாத்திரங்கள் முதலான வைதிக இலக்கியங்கள் தோன்றின. இவை உருவாக்கிய சமூகக் கோட்பாடுகளுக்கு மறுப்பாக ஓர் அறிவுப்புரட்சி தோன்றியது. அப்புரட்சியைப் பரிவிராசகர் அமைப்பு நாடு முழுதும் கொண்டு சென்றது. அந்த அமைப்பின் மூலவர் எண்ணிய கோட்பாட்டின் நிறுவனராகிய கபிலர் ஆவார். எண்ணியம் (சாங்கியம்) தொல்காப்பிய ஐந்திர மரபிலிருந்து கிளைத்தது. வேத வேள்வி எதிர்ப்பும், அணுவியலும், கடவுள் மறுப்பும், எண்ணியத்தின் கூடுதல் அடிப்படை. இவ்வெண்ணியம் கி.மு.6-ஆம் நூற்றாண்டில் ஆசீவகத்தோடு இணைந்தது. அதனால் கி.மு. 8-ஆம் நூற்றாண்டிலோ அல்லது அதற்குப் பின்போ தொல்காப்பியம் இயற்றப்பட்டிருக்குமானால், எண்ணியத்தின் தாக்கம் அல்லது ஆசீவகத்தின் தாக்கம் அதில் இருந்தாக வேண்டும். ஆனால், அப்படி ஒரு சுவடே தொல்காப்பியத்தில் இல்லை.

எனவே, மெய்யியல், பண்பாட்டியல், தருக்கவியல், எழுத்தியல், தொல்லியல் முதலான அனைத்துத் துறைகளின் அடிப்படையில் ஆராய்கின்றபோது, ரிக் வேதத்துக்கு மட்டுமல்ல, உலகில் எழுதப்பட்ட நூல்கள் அனைத்துக்கும் தொல்காப்பியமே முந்தையது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!

"யாவரும் காணவே பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை!' என்று திருவாசகம் - திருச்சதகம் - கைமாறு கொடுத்தல் 9-ஆம் பாடலில் மாணிக்கவாசக சுவாமி குறிப்பிடுகிறார். ஆனால், தற்போது பட்டிமன்றம் என்றே வழங்குகின்றனர். பட்டிமண்டபமா? அல்லது பட்டிமன்றமா? எது சரியானது?

மணிவாசகப்பிரியா, சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com