கண்காணிப்புப் படக்கருவியை (ஸ்ரீஹம்ங்ழ்ஹ) இன்று எங்கும் காண முடிகிறது. இதை நமக்குள்ளேயே பொருத்திப் பார்த்து உணர்த்திய பெருமை தமிழிலக்கியப் பதங்களுக்கு உண்டு.
""கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி யில்லா இடமில்லை, காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் கனவொழிந் தாரே''
(திருமந்திரம்.2067)
எங்கும் நிறைந்துள்ள கடவுளை ஞானக்கண் கொண்டு காண்பவர்கள், தாம் செய்யும் தீய செயல்களிலிருந்து நீங்குவர். ஆனால், தாம் செய்யும் தீமைகளை மேல் பார்க்கும் உயர் அதிகாரி இல்லை என நினைத்து பலர் பலவற்றைத் துணிந்து செய்கின்றனர். எல்லாவற்றையும் கண்காணிக்கும் கடவுளாகிய கண்காணிப்பாளர் இல்லாத இடமே இல்லையாதலால் அந்தக் கண்காணிப்பாளரின் பார்வையிலிருந்து தப்பமுடியாது என்கிறார் திருமூலர். இத் திருமந்திரப் பாடலில் "கண்காணி யில்லா இடம் இல்லை' என்ற வரிதான் கண்காணிப்புக் கருவியை உணர்த்துகிறது.
இதைத்தான் "மனசாட்சி' என்று கலித்தொகையில் நல்லந்துவனார் கீழ்க்காணுமாறு கூறியுள்ளார்.
""கண்டவர் இல்லென' உலகத்துள் உணராதார்
தங்காது தகைவின்றித் தாம்செய்யும் வினைகளுள்
நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் "அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி'யில்லை'' (125)
தாம் செய்யும் தீமைகள் பிறர் அறியாதவை என மறைத்துச் செய்தாலும் தம் நெஞ்சமே அவற்றைக் காட்டிக் கொடுக்கும் சரியான சான்றாதாரக் கருவியாம். இதைத் திருவள்ளுவரும் வழிமொழிந்துள்ளார்.
""தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்'' (293)
வாழ்நாள் முழுவதுமான நெஞ்சக் கறையைத் தண்டனையாக அச்சுறுத்தினார் வள்ளுவர். இத்தகைய சொற்பதங்கள், இன்றைய சமூக அவலங்களாம் நோய்களைத் துல்லியமாக எடுத்துக்காட்டித் தீர்க்கவல்ல தமிழ்க் கண்காணிப்புப் படக்கருவிகளாகத் திகழ்கின்றன.