வள்ளுவர் கூறிய "ஈன்றபொழுதின் பெரிதுவக்கும்' என்ற குறளுக்கேற்ப ஒரு தாய் தன் மகன் சான்றோனாக விளங்குவதற்கு தன்னையே தியாகம் செய்வாள் என்பதை உணர்த்துவது போல் நம் தமிழக வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி.
கமலவதி என்பவள் கர்ப்பவதியாக இருந்தாள். அவள், கணியன் என்னும் ஜோதிடரின் கூற்றுப்படி குறிப்பிட்ட நாளில் இன்ன நேரத்தில் குழந்தை பிறந்தால் அது இப்புவியை ஆளும் என்பதற்காக, அக்குழந்தை பிறக்கும் தறுவாயில் ஜோதிடர் குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு இன்னும் ஒரு நாழிகை பாக்கி இருந்தது. உடனே கமலவதி தன்னைத் தலைகீழாக வைத்துக் கட்டுமாறு கூறினாள். ஒரு நாழிகை கழித்து (ஜோதிடர் குறித்த நேரத்தில்) குழந்தை பிறந்தது. வெகுநேரம் கருப்பை வாயிலிலேயே இருந்ததால் அக்குழந்தையின் கண்கள் சிவந்து காணப்பட்டது. தன் குழந்தையின் சிவந்த கண்களைக் கண்ட கமலவதி "என் கண்ணே செங்கண்ணா' என்று அன்போடு அழைத்தாள். அதிக நேரம் குழந்தையைச் சுமந்து தலைகீழாக இருந்ததால், சிறிது நேரத்திற்கெல்லாம் அந்தத் தாயின் உயிர் பிரிந்தது.
அக்குழந்தைதான் பிற்காலத்தில் பல நாடுகளை வென்று சோழ அரசர்களுள் ஒருவராகத் திகழ்ந்த சோழப் பேரரசன் கோட்செங்கண்ணன்.
இவ்வாறு தன் குழந்தையின் சிறந்த வாழ்க்கைக்காக தாயானவள் தன் உயிரையும் விடத்துணிவாள் என்பதற்கு நம் தமிழக வரலாறே மிகச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.