நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வலக்காற்றும் பெருமழையும்

இயற்கையோடு இயைந்த வாழ்வினரான நம் பழந்தமிழர், இயற்கையின் கூறுபாடுகளைப் பெருமளவில் அறிந்திருந்தனர். கோள்கள், விண்மீன்கள் பற்றியும் அவர்கள் அறிந்திருந்தனர்

News image
Updated On :29 ஆகஸ்ட் 2015, 7:14 pm

சு. பாண்டியன்

இயற்கையோடு இயைந்த வாழ்வினரான நம் பழந்தமிழர், இயற்கையின் கூறுபாடுகளைப் பெருமளவில் அறிந்திருந்தனர். கோள்கள், விண்மீன்கள் பற்றியும் அவர்கள் அறிந்திருந்தனர்

என்பதை,

""செஞ்ஞா யிற்றுச் செலவும்

அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்

பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

வளி திரிதரு திசையும்

வறிது நிலைஇய காயமும் என்றிவை

சென்றளந்து அறிந்தோர் போல'' (புறம்-30)

என்கிறது புறநானூற்றுப் பாடல். குறிப்பாக, காற்றின் திசை பற்றி நன்கு அறிந்திருந்தனர் என்பது பத்துப்பாட்டில் உள்ள சில பாடல்கள் மூலம் அறியலாம். நெடுநல்வாடை என்ற இலக்கியம் மழைபொழியும் காட்சியுடன்தான் தொடங்குகிறது.

""வையகம் பணிப்ப வலனேர்பு வளைஇப்

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென''

"மழைவெள்ளம் பெருகி ஓடுகிறது. இந்த வையகம் குளிரும்படி தான் கிடந்த மலையை மேகம் வலமாகச் சூழ்ந்து மழைபொழிகிறது' என்பது இதன் பொருள். உரையாசிரியர் பெரும்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் "வலன் ஏர்பு' என்பதற்கு, "காற்று வலமாகச் சூழ்ந்து மேகம் எழுமாயின் மழை மிகும்' என்று குறிப்புரை எழுதியுள்ளார்.

""மலைநாறிய வியன்ஞாலத்து

வலமாதிரத்தான் வளிகொட்ப''

""மழைதொழில் உதவ மாதிரங் கொழுக்க''

என மதுரைக்காஞ்சி (4-10) கூறுகிறது. வலப்புறமாக வீசும் காற்றினால் திசைகள் கொழுக்கும்படி பெருமழை பொழியும் என்ற குறிப்பு இங்குக் காணப்படுகிறது. வானத்தில் வலமாகக் காற்று சுழன்று வருவதால் "மேகம் பெய்தல் தொழிலை வேண்டும் காலத்தே தரும்' என்பது பொருள்.

""பாடிமிழ் பணிக்கடல் பருகி வலனேர்பு

கோடு கொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி

பெரும் பெயல் பொழிந்த சிறுபுன் மாலை''

(முல்லை 4-6)

என முல்லைப்பாட்டும் கூறுகிறது. கடலில் இருந்து வலமாகச் சுழன்று எழும் மேகம் பெரும் மழையாகப் பொழிந்தது என்பது இதன் கருத்து. வலப்புறமாகச் சுழன்று காற்று வீசினால் பெருமழை பொழியும் என்பது மூன்று நூல்களிலும் கூறப்பட்டிருக்கிறது.

வடக்கிலிருந்து வீசுவது வாடை; தெற்கிலிருந்து வீசுவது தென்றல்; கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்; மேற்கிலிருந்து வீசுவது மேலைக்காற்று என, காற்றின் திசைக்கு ஏற்பப் பெயர் வைத்து வழங்கிய பழந்தமிழர், வலமாகச் சுழன்று வீசும் காற்றினால் மழைமிகும் என்று கூறியிருப்பது - இன்றைய வானியல் அறிஞர் ஆராய வேண்டிய செய்தி.

-புலவர் ஜோ.தெய்வநீதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.