இல்வாழ்க்கை யானும் இலதானும் மேற்கொள்ளார்
நல்வாழ்க்கை போக நடுநின்று - எல்லாம்
ஒருதலையாச் சென்று துணியா தவரே
இருதலையும் காக்கழித் தார். (பாடல்-208)
இல்லற வாழ்க்கையானாலும் அஃதில்லாத துறவற வாழ்க்கையானாலும் தாம் உறுதியாக இரண்டில் ஒன்றை மேற்கொண்டு ஒருவர் ஒழுகலாம். அப்படி ஒழுகாதவராகி, சிறந்த வாழ்நாள் வீணாகக் கழிந்து போக, நடுவே எதனிலும் செல்லாமல் தடைப்பட்டு நின்று, எல்லாவற்றையும் ஆழ்ந்து, உறுதியாகத் துணிந்து ஒரு வழியாலே நடக்காதவர்கள் வாழ்வைப் பயனின்றிக் கழித்தவர்கள். அவர்களே காவின் இருபக்கத்திலுள்ள பொருள்களையும் நீக்கிவிட்டுத் தண்டினை மட்டுமே சுமந்து செல்பவர்களுக்கு ஒப்பானவர். "இருதலையும் காக்கழித் தார்' என்பது பழமொழி.