கண்டறிவார் போலார் கெழீஇயின்மை செய்வாரைப்
பண்டறிவார் போலாது தாமும் அவரேபோல்
விண்டொரீஇ மாற்றி விடுதல், அதுவன்றோ
விண்டற்கு விண்டல மருந்து. (பாடல்-251)
நம்மை நன்கு அறிந்தவராக இருந்தும், அறியாதவரைப் போல நட்புக்குப் பொருந்தாத செயல்களைச் செய்வார்கள் சிலர். அவரை, நாமும் முன்னே அறிந்தவரைப் போலாது, அவரைப் போலவே உள்ளத்தாற் பிரிந்து அவரை ஒதுக்கிவிட வேண்டும். அப்படிச் செய்வதே, ஒருவன் கைவிட்ட காலத்து, அவனைப் போற்றாது தானும் கைவிடுதலே அவன் செயலுக்கு நல்ல மருந்து என்று சொல்லப்படுவதாகும். "விண்டற்கு விண்டல மருந்து' என்பது பழமொழி.