விதிப்பட்ட நூலுணர்வு வேற்றுமை இல்லார்
கதிப்பவந் நூலினைக் கையிகந்தா ராகிப்
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்துப் பட்ட மறு. (பாடல்-258)
கற்க வேண்டியது என விதிக்கப்பட்ட அற நூல்களைக் கற்று உணர்ந்து, அவற்றிலே கூறப்பட்ட நெறிகளுக்கு மாறுபாடு இல்லாதவராகவும் விளங்குபவர். அந்நூலுக்கு மாறாக எழுந்தவர்களின் நூல்களை எல்லாம் பொருந்தாது எனக் கைவிடப்பட்ட வருமாகி, ஒரு நிலைமைப்பட்டு வாழ்ந்து வருபவர், தாமே பழியான செயல்களைச் செய்தால் சந்திரனிடத்துப்பட்ட களங்கத்தைப் போல, அது எங்கும் விளங்கித் தோன்றி அவருக்கு இழிவைத் தரும். "மதிப்புறத்துப் பட்ட மறு' என்பது பழமொழி.