இந்த வாரம் கலாரசிகன் - 30-03-2025

இன்றுடன் தி.க.சி.யின் பிறந்த நூற்றாண்டு நிறைவு பெறுகிறது.
இந்த வாரம் கலாரசிகன் - 30-03-2025
Published on
Updated on
2 min read

இன்றுடன் தி.க.சி.யின் பிறந்த நூற்றாண்டு நிறைவு பெறுகிறது. அவருடனான எனது தனிப்பட்ட நெருக்கமும், அவர் மீது எனக்கிருக்கும் அளப்பரிய மரியாதையும் பல முறை என்னால் பதிவு செய்யப்பட்டுவிட்டன. இப்போதும்கூட ஓவியர் வள்ளிநாய

கம் என்னை சந்திக்கும்போதும், என்னுடன் பேசும்போதும் தி.க.சி. நினைவுகள் தவறாமல் இடம் பெறும்.

கவிஞர் பே.ராஜேந்திரன் (பேரா) நெல்லைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தி.க.சி.யின் பிறந்த நூற்றாண்டைக் கொண்டாட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தார். நாங்கள் இருவரும் பலமுறை அதுகுறித்துப் பேசினோம், விவாதித்தோம். நீதியரசர் அரங்க.மகாதேவனை அழைத்து தி.க.சி. குறித்துப் பேச வைக்க வேண்டும் என்கிற ஆவல் எங்கள் இருவருக்குமே இருந்தது. இருக்கிறது.

நடக்கவில்லை என்றால் நடக்கப் போவதில்லை என்று அர்த்தமில்லை. இப்போது உச்சநீதிமன்ற நீதிபதியாகக் கடுமையான பணிச்சுமையுடன் இருந்தாலும்கூட, தி.க.சி. குறித்த நிகழ்ச்சியை நடத்த அவர் கட்டாயம் துணை நிற்பார் என்பதில் எனக்கு ஐயப்பாடு கிடையாது. எப்போது என்பதுதான் கேள்வி.

தி.க.சி. குறித்துப் பேசும்போதெல்லாம் எனக்கு நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் சொன்ன ஒரு செய்திதான் நினைவுக்கு வரும். ''ஒளவைப் பிராட்டிக்கு நெல்லிக் கனி கிடைத்ததுபோல எனக்கு ஒரு நெல்லிக் கனி கிடைத்தால் அதை நான் தி.க.சி.க்குக் கொடுத்து விடுவேன். அது என்னைப்போல பல படைப்பாளிகளை அவர் ஊக்குவித்து உருவாக்க வழிகோலும்.'' என்று சொல்வாராம் நா.பார்த்த சாரதி!

-------------------------------------------

தமிழகத்தின் இப்போதைய நிதித் துறை முதன்மைச் செயலாளர் த.உதயசந்திரன், அவருக்கு முன்னால் பதவியில் இருந்தவர்கள் யாருமே யோசிக்காத, செய்யாத ஒன்றை செய்து காட்டியிருக்கிறார்.

பத்து நாள்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் நிதித் துறை சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் 'தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்' என்கிற ஆவண நூல் ஒன்றை எனக்கு அனுப்பித் தந்திருந்தார் அவர். நாள்தோறும் ஒன்று அல்லது இரண்டு என்று அதில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

சங்க காலத்தில் தொடங்கி இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழர்களின் நிதி நிர்வாகம் எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டும் ஆவணம் இது. பண்டைய வணிகம், வரி விதிப்பு முறைகள், நிதிக் கொள்கைகள், காலனிய கால நிதி நிர்வாக நடைமுறைகள், சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கைகள் என்று ஒன்று விடாமல், அரிய தகவல்கள், தரவுகள் இணைக்கப்பட்டு ஆராயப்பட்டிருக்கின்றன.

அரசியல் மனமாச்சரியங்களுக்கு இடமளிக்காமல் காங்கிரஸ் ஆட்சியின்போது தமிழகத்தில் அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரின் கட்டுரைகளும் இதில் இடம்பெறுகின்றன. நெ.து.சுந்தரவடிவேலு, பழ.கோமதிநாயகம் உள்ளிட்ட தலைசிறந்த நிர்வாகிகளின் அனுபவப்பதிவுகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. 'பாபாசாகேப்' அம்பேத்கர் எழுதிய ஒரு கட்டுரை மிகக் பொருத்தமாகப் பதிவாகி இருக்கிறது.

'சென்னை மாகாணத்தின் மக்கள்நல நோக்கு' என்றொரு கட்டுரை. எழுதி இருப்பவர் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்த பி.ஜெ. தாமஸ். இடையிடையே தரப்பட்டிருக்கும் சிறுசிறு தகவல்கள் மலைப்பை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டுக்கு ஒன்று.

இந்திய அரசியலமைப்பில், எந்த இடத்திலும் பட்ஜெட் என்ற சொல் உபயோகிக்கப்படவில்லை. 'வருடாந்திர நிதி நிவாரணம்' என்ற சொற்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பட்ஜெட் என்ற பெயர் எப்படி வந்தது? பிரிட்டிஷ் நிதியமைச்சர்கள் அந்தந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளை ஒரு தோல் பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு நாடாளுமன்றமான 'காமன்ஸ்' சபைக்குப் போவார்கள். அந்தத் தோல் பெட்டிக்குத்தான் 'பட்ஜெட்' என்று பெயர். நாளடைவில் அந்தப் பெட்டியின் பெயர், அதன் உள்ளே இருந்தவற்றிற்கும் ஆகிவிட்டது. உலகெங்கும் இச்சொல்லே இப்போது வழக்கத்தில் வந்துவிட்டது.

இந்த ஒரு பங்களிப்புக்காக ஆண்டுகள் பல கடந்தும், நிதித்துறைச் செயலாளர் த.உதயசந்திரன் தமிழ்கூறும் நல்லுலகத்தால் நினைவுகூரப் படுவார் என்பது மட்டும் உறுதி.

-------------------------------------------

என் தேசத்து ஜதிகள் (2002), வார்த்தைக்குள் சிக்காத இரவின் உயரம் (2005), மழையில் கரையும் இரவின் வாசனை (2007) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளுக்குப் பிறகு, 17 ஆண்டு இடைவெளிக்குப் பின், நான்காம் கவிதைத் தொகுப்பாக 'வேடிக்கை பார்க்கும் இருள்' தொகுப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறார் மாநிலக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் மு.ரமேஷ். அவரது கவிதைத் தொகுப்பு விமர்சனத்துக்கு அனுப்பித் தரப்பட்டிருந்தது.

மாற்றுத் திறனாளிப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க ஒருவராக முனைவர் மு.ரமேஷை உயர்த்திப் பிடித்திருக்கிறது இந்தக் கவிதைத் தொகுப்பு. ஆய்வுத் தளத்திலும், படைப்பிலக்கியத்திலும் ஒருசேர இயங்குபவர் அவர். கல்லூரிப் பேராசிரியரும்கூட. 'வேடிக்கை பார்க்கும் இருள்' என்கிற இந்த கவிதை நூல், அவரின் பார்வையற்ற அனுபவத்தை வெவ்வேறு சமூகச் சூழல்களில் வெளிப்படுத்துகிறது. எளிய நடையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்களையும், உணர்வுகளையும், எண்ண ஓட்டங்களையும், தனித்துவமான அவர்களது நுண்ணறிவுப் பார்வையையும் முன்வைக்கின்றன.

முனைவர் மு.ரமேஷின் 'வேடிக்கை பார்க்கும் இருள்' தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது 'பிரார்த்தனை' என்கிற இந்தக் கவிதை -

பிரார்த்திக்கிறேன் முப்பொழுதும் இல்லை

எப்பொழுதாவது பிரார்த்திக்கிறேன்

பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்

கடவுள் கைவிட்டாலும்

பிரார்த்தித்துக்கொண்டே இருப்பேன்

ஏனெனில் எனது பிரார்த்தனை

கடவுளுக்கானது அல்ல

எனக்கானது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com