முருகப் பெருமான், அன்னையிடம் வேல் பெற்றுக்கொண்டு மட்டும் போருக்குச் செல்லவில்லை. இன்னும் பல சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் பெற்றார். அதில் ஒன்று மழு என்ற ஆயுதம். இந்த ஆயுதத்தால் அசுரனின் தலையைக் கொய்து, அதை எடுத்து வரும் வழியில், மாலை வெகு நேரம் ஆனதால், ஓர் இடத்தில் தங்க நேர்ந்தது. அங்கே முனிவர்கள் தவம் செய்துவந்தனர். அவர்களுக்கு காட்சி தந்து அருளினார் குமரப் பெருமான். மேலும், சூரியன் மேற்கில் மறைந்த பின்னே முனிவர்களுக்கு மேற்கு முகமாக நின்று காட்சி அளித்தார். இவ்வாறு, அசுரனை அழிக்க அன்னையிடம் மழு என்ற ஆயுதத்தைக் கேட்டுப் பெற்றதை நினைவுகூரும் வகையில் "கொடுமழு ஊர்' என்று அழைக்கப்பட்டது இந்த ஊர். மேலும் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் இருந்ததால், மேலக் கொடு மழூர் என்று ஆனது. இதுவே பின்னாளில் மேலக்கொடுமலூர் என்று மருவி வழங்கப்படுகிறது. இத்தல இறைவன் குமரனை, பாம்பன் சுவாமிகள், திருவேகம்பத்தூர் கவிராஜ பண்டிதர், எமனேசுவரம் ஜவ்வாதுப்புலவர் உள்ளிட்ட பலரும் பாடியுள்ளனர்.