ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

குரு பகவானுக்கு காசியில் கிடைத்த கிரக பதவி!

குருவின் தந்தை சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கீரச முனிவர். தாயார் ஸ்ரத்தா தேவி. குருவுக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. 

News image
Updated On :6 நவம்பர் 2020, 12:30 am

எஸ். எஸ். சீதாராமன்

குருவின் தந்தை சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கீரச முனிவர். தாயார் ஸ்ரத்தா தேவி. குருவுக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. 
இவர் நான்கு வேதங்கள், அறுபத்தி நான்கு ஆய கலைகளிலும் தேர்ச்சி பெற்று முதன்மையானவராகத் திகழ்கிறார். அளவற்ற பலங்களை நல்கும் பேறு குருபகவானுக்கு எவ்வாறு கிட்டியது எனப் பார்க்கலாம்: 
முக்தி தரும் காசி என்றழைக்கப்படும் வாரணாசியின் கங்கைக் கரையில் சிந்தியா காட்டிலுள்ள ஆத்மவீரேஸ்வரர் கோயிலுக்கு எதிர்புறம், சங்கடாதேவி கோயிலைக் கடந்து சென்றால் பிரஹஸ்பதியின் கோயிலை அடையலாம். 
ஆங்கீரச முனிவரின் புத்திரரான குரு, காசி ஷேத்திரத்திற்கு வந்து ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தவம் மேற்கொண்டார். அன்ன ஆகாரமின்றி கடுந்தவம் பல வருடங்கள் தொடர்ந்தது. குருவின் தவத்தினை மெச்சி அவர் முன் ஈசன் தோன்றினார். கண்விழித்த குரு, சிவனைக் கண்டு ஆனந்தம் அடைந்து பக்திப்பரவசத்தில் துதித்து போற்றி வணங்கினார். அவரது பக்தியின் மேன்மையை கண்டு மகிழ்ந்த ஈசன், "இன்றிலிருந்து தேவர்களுக்கெல்லாம் ஆசானாய் "பிரஹஸ்பதி' என்றும், பேசும் திறனில் அளவற்ற அறிவினைப் பெற்றதால் "வாசஸ் பதி' என்ற பெயரினைப் பெறுவாய் என்றும்' குரு பகவானுக்கு சிவனார் அருளினார். மேலும் கிரக பதத்தில் வீற்றிருக்கும் சிறப்பும் எய்தினார். 
அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கம், "பிரஹஸ்பதீஸ்வரர்' என்று அழைக்கப்படலாயிற்று. ஒரு முகமும் நான்கு கைகளுடன், புத்தகம், ஜெபமாலை தாங்கியவராக குருபகவான் சித்தரிக்கப்படுகிறார். யானை வாகனத்தை உடையவர். 
குருவும், தட்சிணாமூர்த்தியும்: தட்சிணாமூர்த்தி சிவனின் அம்சம், சிவ வடிவம், சிவகுரு, ஞானத்தின் அம்சம் அவரை வழிபட்டால் சித்தத்தில் தெளிவும், ஞானமும் பிறக்கும். இவர் ஆலயங்களில் தென் திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். ஆனால் குரு பகவான் நவ கிரகங்களில் சூரியனுக்கு வடகிழக்கில் சுப கிரகமாக வீற்றிருந்து அருள்புரிபவர். ஆகையால் இரு குருமார்களும் ஒருவரல்ல என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். 
இப்பூவுலகில் மானிட சரீரம் எடுத்து ஞானத்தால் செம்மையுற, சுகமாக வாழ, அருள் தரக்கூடிய சக்தி பிரஹஸ்பதியான குரு பகவானுக்கே உரித்ததாகும். இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் பிரஹஸ்பதியின் அருளாசியினைப் பெற்று பெருவாழ்வு வாழ்வோம்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.