வளமான வாழ்வுக்கு வேண்டிய  நவ நிதிகள்!

பாலாறு பாயும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிபாட்டுச் சிறப்புமிக்க பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன.
வளமான வாழ்வுக்கு வேண்டிய  நவ நிதிகள்!
வளமான வாழ்வுக்கு வேண்டிய  நவ நிதிகள்!
Updated on
1 min read

பாலாறு பாயும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிபாட்டுச் சிறப்புமிக்க பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன.

காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் 8 கி.மீ. தொலைவில் ஏகனாம்பேட்டைக்கு வடக்கே சிறிது தூரத்தில் நவாஸ்பேட்டையில் வற்றாத செல்வங்களை அளிக்கும் நவநிதீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 

குபேர ஈசுவரர் - பைரவ நாதர்: இங்கு எழுந்தருளியுள்ள இறைவனுக்கு காசி விசுவநாதர் என்ற பெயரும் உண்டு. குபேரன், தான் இழந்த நவநிதிகளையும் இறைவன் வழங்கியதால் "குபேர ஈசுவரர்' என்றும், காசியைப் போல பைரவருக்கு சிறப்பு ஆகர்ஷன சக்தியை அளித்ததால் "பைரவ நாதர்' என்றும் போற்றப்படுகிறார். அம்பிகை செல்வநாயகி என அழைக்கப்படுகிறார்.
பழைமையான இத்திருக்கோயில் வளாகத்தில் செடிகள், மரங்கள் முளைத்து பராமரிக்கப்படாமல் இருந்ததைக் கண்டு, சென்னை அண்ணாமலையார் அறப்பணிக் குழுவினரும், கோயில் நிர்வாகத்தினரும் இணைந்து உழவாரத் திருப்பணியை மேற்கொண்டனர். காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரசுவதி சுவாமிகள் இத்திருக்கோயிலுக்கு விஜயம் செய்து அருளுரையாற்றி, ஆசிகளை வழங்கித் திருப்பணிகளைத் துவக்கி வைத்தார்.  கடந்த 10.11.2019 -இல் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது.

நந்தி மீது அமர்ந்த கோலம்: கருவறையில் இறைவன் உமையுடன் நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். கருவறை முன் மண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், வற்றாத செல்வம் வழங்கும் குபேரரைக் கண்டு வழிபடலாம். 

அழகிய சிற்ப வடிவங்கள்: நுழைவு வாயில் மண்டபத்தின் தூண்களில், கண்ணப்பர் வரலாறு, காமாட்சி அம்மன் வழிபாடு, இறைவனை அடியவர் வழிபடும் காட்சி கள் அழகாகக் காட்சியளிக்கின்றன.

அணையா தீபம்: கோயிலுக்கு மேற்கே அகத்தியருக்கு தனி சந்நிதி ஏற்படுத்தப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தீபம் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும். மன அமைதி வேண்டுவோர் இங்கு அமர்ந்து தியானம் செய்யலாம். 

வளமான வாழ்க்கைக்கு வேண்டிய பதும நிதி, மகா பதும நிதி, சங்க நிதி, மகர நிதி, கச்சப நிதி, கற்ப நிதி, நந்த நிதி, நீல நிதி, முகுந்த நிதி ஆகிய நவநிதிகளையும் அளிக்கும் நவநிதீசுவரரையும், அம்பிகை செல்வநாயகியையும் வழிபட்டு நலமடைவோம். 

இக்கோயிலின் வடகிழக்குப் பகுதியில் அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த பைரவர் சந்நிதி அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயில் திருப்பணிக்கும், சிறப்பான வழிபாட்டிற்கும் பக்தர்கள் உதவி செய்யலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com