புதுச்சேரியில் 3 மணி நேரம் கொடை மழை! மக்கள் மகிழ்ச்சி!!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?பகல் நேரத்தைப் போல இரவிலும் வீடுகளுக்குள் வெப்பம்! ஆய்வில் அதிர்ச்சிஇபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனைஅதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசுஅடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை.

News image

குற்றாலநாதர்

Updated On :54 நிமிடங்கள் முன்பு

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தர் குற்றாலநாதரைப் பற்றியும், குறும்பலாவைப் பற்றியும் பதிகங்கள் இயற்றியுள்ளார். "குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்' என்று அப்பரும் ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார். சுந்தரர், மாணிக்கவாசகர், கபிலர், பட்டினத்தார், அருணகிரிநாதரும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளனர்.

தென்காசி, மேலகரம் திரிகூட ராசப்ப கவிராயரால் இயற்றப்பட்ட திருக்குற்றால தலபுராணம், திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றாலக் கோவை, குழல்வாய்மொழி கலிப்பா உள்பட பல இலக்கியங்கள் இத்தலத்துக்குப் பெருமை சேர்க்கின்றன.

இன்றைய குற்றாலநாதர் கோயில், மாமன்னன் ராஜராஜனால் வடிவமைக்கப்பட்டதுடன், முதல் சுற்று வீதி சுவரும் அவரால் கட்டப்பட்டது. கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், குழல்வாய்மொழி அம்மன் சந்நிதி, பிள்ளையான் கட்டளை மண்டபம் ஆகியவை பாண்டிய மன்னர்கள் காலத்திலும், பராசக்தி சந்நிதி நாயக்கர் காலத்திலும், திரிகூட மண்டபம் வடகரை ஆதிக்கம் சொக்கம்பட்டி மன்னர்களாலும் கட்டப்பட்டது. அதன் பிறகு கோயிலுக்குப் பலரால் பலவிதத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோயிலில் 89 கல்வெட்டுகள் வடிக்கப்பட்டுள்ளன. அதில் சோழமன்னன் முதலாம் பராந்தகன் காலத்தில் எழுதப்பட்ட 10 கல்வெட்டுகளும் அடக்கம்.

கிழக்கு நோக்கியுள்ள முதன்மை நுழைவுவாயில் கைப்பிடியாக இரண்டு கல்யானைகளும், தொடர்ந்து நூறு தூண்களைக் கொண்ட திரிகூட மண்டபமும், வரவேற்பு மண்டபமும், அதன் இருபுறம் அம்பல விநாயகர், ஆறுமுகநயினார் சந்நிதியும், அடுத்து நமஸ்கார மண்டபம், பலிபீடம், கொடிமரம், நந்தியும் அமைந்துள்ளன. அர்த்தமண்டபத்தில் அனுக்ஞை விநாயகரும், உற்சவ விக்ரகங்களாக ஐம்பொன் நடராஜர், குற்றாலநாதர், சோமாஸ்கந்தர், குழல்வாய்மொழியம்மை, பிரியாவிடையும் அருள்கிறா ர்கள்.

கருவறையில் சிறிய லிங்கத் திருமேனியராக இறைவன் குற்றாலநாதர் எழுந்தருளியுள்ளார். இவர் குற்றாலீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இவருக்கு காலசந்தி அபிஷேகத்தின்போது மூலிகைத் தைலம் சாத்தப்படுகிறது. அதைப் பிரசாதமாக ஏற்றுப் பயன்படுத்தினால் தலைவலி, சளி, மூச்சுத் திணறல், வயிற்று வலி உள்ளிட்ட நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

கோஷ்டத்தில் பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தியும், பிரகாரத்தில் சப்தமாதர், கன்னி விநாயகர், பஞ்சலிங்கம், அகத்தியர், சாஸ்தா, காளிந்தியப்பர், அண்ணாமலை

நாதர், வன்மீகநாதர், ராமலிங்கர், சூரியன், சந்திரன், வள்ளி } தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரரும், தனி சந்நிதியில் சனிபகவானும் எழுந்தருளியுள்ளனர்.

இறைவனுக்கு வலப்பக்கம் இறைவி குழல்வாய் மொழியம்மை சந்நிதி உள்ளது. பேச்சுக் குறைபாடுள்ளவர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்து கொண்டால், குறை நீங்குகிறதாம். அம்மன் சந்நிதி வாயிலின் முன்புறம் அண்ணாவிப் பிள்ளை (சித்தர்) பீடமும், பரிவார தேவதை பீடமும் உள்ளன.

அம்பாள் உள்பிரகாரத்தில் கைலாசநாதர், துர்கை, அடுத்துள்ள பிரகாரத்தில் தலமரமான குறும்பலாவும், அதற்கு எதிரில் ஆதிகுறும்பலா, அறுபத்து மூவர், தொகையடியார்கள் பத்துபேர், நன்கரப் பெருமாள், வல்லப விநாயகர், பாபநாசர், உலகம்மை, நெல்லையப்பர், காந்திமதி, மணக்கோலநாதர், நாறும்பூநாதர், பால் வண்ணநாதர் எனப் பலரும் அருள்கிறார்கள்.

இத்தலத்தின் சிறப்புகளுள் முக்கியமானது பராசக்தி பீடமாகும். குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் இந்தப் பீடத்தின் முன்புள்ள கல் மண்டபத்தில் தொட்டில் கட்டி பராசக்தியை வழிபட்டு நற்பேறு பெறுகிறார்கள்.

ஆடல்வல்லானான சிவபெருமான் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளுள் குற்றாலத்தில் உள்ள சித்திரசபையும் ஒன்று. குற்றாலநாதர் கோயிலுக்குச் சற்றுத் தள்ளி அமைந்துள்ளது சித்திர சபை. அங்கு மூலவரான நடராஜபெருமான் சித்திர வடிவில் எழுந்தருளியுள்ளார்.

சித்திர சபையின் உள்புறத்தில் அரிய மூலிகைகளைக் கொண்டு மிக நேர்த்தியாகவும், அழகாகவும் தீட்டப்பட்ட மூலவர் நடராஜர், பிற தெய்வங்களின் சித்திரங்களைக் காண கண்கோடி வேண்டும். மார்கழி திருவாதிரையில் இங்கு பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படும் ஆருத்ரா தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

சிவாலயத்துக்குரிய அனைத்து விழாக்களும் குற்றாலநாதர் கோயிலில் சிறப்புற நடைபெறுகின்றன. குற்றாலப் பேரருவியே இந்தக் கோயிலின் தீர்த்தமாக விளங்குகிறது.

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும் இந்தக் கோயில் தென்காசி புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

- மு.வெங்கடேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.