

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலுள்ள வணிக வளாகத்தில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு, பயங்கரவாதச் செயல் என அந்த நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.
தலைநகர் மாஸ்கோவிலுள்ள அதிபர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற ராணுவ அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
புத்தாண்டை வரவேற்கத் தயாராகி வரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் வணிக வளாகமொன்றில், பொருள்களை வைப்பதற்கான பாதுகாப்பு அறையில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு புதன்கிழமை வெடித்துச் சிதறியது.
வீட்டில் தயாரிக்கப்பட்ட அந்த வெடிகுண்டு, 200 கிராம் டிஎன்டி வெடிபொருளின் சக்தியை வெளிப்படுத்தியதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த குண்டுவெடிப்பில் 13 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கை ரஷிய போலீஸார் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினாலும், தற்போது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு இந்த வழக்கு கைமாறியுள்ளது.
ஏற்கெனவே, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற அல்-காய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பு, சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக அந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகக் கூறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.