லண்டன்: உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ள இங்கிலாந்து பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
இங்கிலாந்தின் ஆளும்கட்சியாக இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக பிரதமராக இருப்பவர் தெரேசா மே. ஐரோப்பிய யூனியனின் இருந்து இங்கிலாந்து வெளியேறும் 'பிரெக்சிட்' முடிவை அதிகார்ப்பூர்வமாக சில மாதங்களுக்கு முன்பாக அறிவித்த கையோடு, பொதுத் தேர்தல் முன்னதாகவே நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். இது அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சியான லேபர் கட்சி பிரதமர் வேட்பாளர் கார்பின், பிரதமர் தெரேசா மேக்கு கடும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கடுமையான பிரச்சாரங்களுக்குப் பிறகு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
உள்ளூர் நேரப்பபடி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக நாடு முழுவதும் 40000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக 650 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்தெடுக்கும் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு, 4.69 கோடி மக்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் சிலர் முன்பே தங்கள் வாக்குகளை தபால் ஓட்டு மூலம் பதிவு செய்து விட்டனர்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டு எண்ணிக்கை துவங்கி விடும். நள்ளிரவு நேரத்தில் பெரும்பாண்மை நிலவரங்கள் தெரியத் துவங்கும். நாளை மதியம் முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டு விடும்.
பெரும்பாண்மை பெறுவதற்கு மொத்தமுள்ள 650 இடங்களில், ஒரு கட்சியானது 326 இடங்களை வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.