அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடு செய்ததாககக் கூறப்படுவது மாபெரும் வதந்தி' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் மாற்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டிரம்ப் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடு செய்தது அப்போதைய அதிபருக்கு தெரியுமா?
அப்படி தெரிந்திருந்தும் அவர் ஏன் அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? அதுகுறித்து எங்களது பிரசாரக் குழுவிடம் ஏன் கூறவில்லை?
எனென்றால், தேர்தலில் ரஷியா தலையிட்டது என்பதே ஒரு மாபெரும் வதந்தியாகும்.
அதனால்தான் அதுகுறித்து ஒபாமா எதுவுமே பேசாமல், தேர்தலில் ஹிலாரி கிளிண்டன்தான் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கையுடன் இருந்தார் என்று தனது பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது, அப்போதைய குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப்புக்கு ஆதரவாக வாக்காளர்களின் மனநிலையை மாற்றும் வகையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் மின் அஞ்சல் மற்றும் அலுவலக ஆவணங்களை இணையதளம் மூலம் ஊடுருவி வெளியிட்டதாக 12 ரஷிய உளவுத் துறை அதிகாரிகள் மீது அமெரிக்க நீதித் துறை அமைச்சகம் கடந்த வாரம் குற்றச்சாட்டு பதிவு செய்தது.
அதையடுத்து, அதற்கு முன்னரே திட்டமிட்டிருந்தபடி ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்துப் பேசக் கூடாது என்று பலரும் வலியுறுத்தினர்.
எனினும், ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் டிரம்ப் - புதின் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.
அந்தச் சந்திப்புக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இரு நாட்டு நல்லுறவை பலப்படுத்துவதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
அப்போது பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடு செய்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு கூறியுள்ளதை மறுக்கும் வகையில் பேசினார்.
அதிபர் தேர்தலில் தலையிட்டது என நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை' என்று அப்போது அவர் கூறியது, அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டது மூலம் ஜனநாயகத்தின் மாண்பைக் குலைத்த ரஷியாவிடம் அதிபர் டிரம்ப் பணிந்து போய்விட்டதாக பலரும் குற்றம் சாட்டினர்.
ஹெல்சிங்கி பேச்சுவார்த்தைக்குப் பிறகு டிரம்ப் பேசியது குறித்து ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சியின் மூத்த எம்.பி.க்கள் உள்பட முக்கிய தலைவர்களும், ஊடகங்களும் கடும் கண்டனம் தெரிவித்தன.
எனினும், அரசியல் ஆதாயத்தைவிட அமைதியே முக்கியம் என்று கருதி, அத்தகைய கருத்துகளை வெளியிட்டு வருவதாக இரண்டு நாள்களாக தன்னிலை விளக்கமளித்து வந்த டொனால்ட் டிரம்ப், 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடு செய்ததாக பிறகு ஒப்புக் கொண்டார்.
மேலும், ஹெல்சிங்கி சந்திப்புக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, வார்த்தைகளைப் பிழையாகப் பயன்படுத்திவிட்டதாக அவர் விளக்கமளித்தார்.
இந்த நிலையில், தேர்தலில் ரஷியா தலையிட்டதாகக் கூறப்படுவதே ஒரு வதந்தி என்று அவர் மீண்டும் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









