நியூயார்க்: மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டு தற்பொழுது அமெரிக்க சிறையில் இருக்கும் தீவிரவாதி டேவிட் ஹெட்லி, சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார்.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல் நடத்தினார்கள். பொதுமக்கள் கூடும் தாஜ் ஓட்டல், சத்திரபதி சிவாஜி ரெயில்வே ஸ்டேசன் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த கொடூரத் தாக்குதலில் 160-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்ட பாகிஸ்தான் வாழ் அமெரிக்கரான டேவிட் ஹெட்லி அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். டேவிட் ஹெட்லியின் உண்மையான பெயர் தாவூத் சயத் கிலானி என்பது ஆகும். இவர் வாஷிங்டனில் பிறந்தவர். விசாரணைக்குப் பின்னர் அமெரிக்க நீதிமன்றம் ஹெட்லிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவர் சிகாகோ மாகாண சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரே சமயத்தில் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகளுக்கும் அமெரிக்க அரசுக்கும் ஆதரவாகச் செயல்பட்டார் என்று கூறி, சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேவிட் ஹெட்லி மீது கடந்த 8-ம் தேதி சக கைதிகள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஹெட்லி படுகாயம் அடைந்தார்.
தற்பொழுது பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெட்லி மீதான தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.