நியூயார்க்: மனைவிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் அளித்து பிரபல தொழிலதிபர் ஒருவர் விவாகரத்து செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் நிறுவனர் ஜெப் பெசோஸ். இவர் அந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பே, நாவலாசிரியரான மக்கின்சியை காதலித்து, திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் 1993 செப்டம்பரில் நடந்தது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில் தற்போது தங்களது விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர். அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சியில் மக்கின்சி கணிசமான பங்களிப்பு செய்துள்ளார். ஆனால் அவர் அமேசான் நிறுவனத்தில் பங்குகள் எதுவும் வைத்திருக்கவில்லை.
ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தில் 16 சதவீத பங்குகள் வைத்துள்ளார். அவற்றின் இந்திய ருபாய் மதிப்பு சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஆகும். அமெரிக்க திருமண முறிவுச் சட்டப்படி ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான சொத்துகளில் பாதியளவு, மனைவி மக்கின்சிக்கு உரிமை உள்ளது. அதன்படி அமேசான் நிறுவனத்தில் ஜெஃப் பெசோஸ் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் பாதியளவான 8 சதவீத பங்குகளை மக்கின்சிக்குக் கொடுக்க வேண்டும்.
இந்நிலையில் கணவரின் 16 சதவீத பங்குகளில் 4 சதவீத பங்குகளை மட்டும் பெற்றுக்கொள்ள மக்கின்ஸி ஒப்புக் கொண்டார். இதையடுத்து இருவரும் வியாழன் அன்று விவகாரத்து சொத்து பிரிப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இதன்படி அமேசான் நிறுவனத்தில் பெசோசுக்கு 12 சதவீத பங்குகளும், மக்கின்ஸிக்கு 4 சதவீத பங்குகளும் என பிரித்துக் கொள்ளப்பட்டுள்ளது. அமேசான் பங்குகளில் 4 சதவீதம் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆகும்.
இதை ஏற்றுக் கொண்ட மக்கின்ஸி , வாஷிங்டன் போஸ்ட் உட்பட மற்ற நிறவனங்களில் உள்ள தனது பங்குகளையும் கணவர் பெசோசுக்கு விட்டுக் கொடுக்க அவர் முன் வந்துள்ளார்.
நவீன சமூக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு விவகாரத்து சொத்து பிரிப்பு உடன்பாடாக இது அனைவராலும் கருதப்படுகிறது.