கிழக்கு சீனாவில் சரக்கு லாரி மீது பயணிகள் பேருந்து மோதியதில் 36 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கிழக்கு ஜியாங்சு மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்றில் 69 பேர் சென்றனர். வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராத விதமாக எதிரே வந்த சரக்கு லாரி மீது மோதியது. சுமார் 8 மணி நேரங்களாக மீட்புப்பணி நடைபெற்றது. இதனால் அங்கு போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் இதுவரை 36 பேர் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் சாலை விபத்துகள் என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. அங்கு போக்குவரத்து விதிமுறைகளை முறையாக செயல்படுத்தாதது மற்றும் விதிமுறைகளை மீறுவது தான் இதுபோன்ற விபத்துகளுக்கு அடிப்படை காரணமாகப் பார்க்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டில் மட்டும் சீனாவில் 58,000 பேர் விபத்துக்களில் பலியானதாக தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.