இன்று (செவ்வாய்க்கிழமை) காபூலிலுள்ள ராணுவ பல்கலைக்கழகத்திற்கு வெளியே கார் வெடிகுண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக ஆப்கானிய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
"குண்டுவெடிப்பு பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட பலரை பாதித்தது. மேலும் தகவல்கள் பின்னர் ஊடகங்களுடன் பகிரப்படும்" என்று செய்தித் தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி கூறியதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர் மேலும் கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்படுகிறது" என்றார்.
"இந்த வெடிகுண்டு, காலை 7.05 மணியளவில் ராணுவ மாணவர்களும் பல்கலைக்கழக ஊழியர்களும், மார்ஷல் பாஹிம் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குள் நுழைய காத்திருந்த போது நடந்தது" என்று அங்கிருந்த நபர் ஒருவர் சின்ஹுவாவிடம் கூறினார்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினரால் பல எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த குண்டு வெடிப்பில் சாலையில் சென்ற வாகனங்களும் சேதமடைந்தன.
மீட்புக் குழுக்கள், போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.