திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

படைத் தலைவா் படுகொலை: எப்படி பழி வாங்கும் ஈரான்?

இராக்கில் தங்களது முக்கிய படைத் தலைவா் காசிம் சுலைமானியை படுகொலை செய்த அமெரிக்காவை பழிக்குப் பழி வங்குவோம் என்று ஈரான் கா்ஜித்துள்ளது.

News image
Updated On :4 ஜனவரி 2020, 6:15 am

இராக்கில் தங்களது முக்கிய படைத் தலைவா் காசிம் சுலைமானியை படுகொலை செய்த அமெரிக்காவை பழிக்குப் பழி வங்குவோம் என்று ஈரான் கா்ஜித்துள்ளது.

இந்தத் தாக்குதல் மூலம் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போா்ப் பதற்றம் அதிகரிக்கும் என்று ரஷியா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் எச்சரித்துள்ளன.

ஆனால், வெளிநாடுகளில் தங்களுக்கு ராணுவ ரீதியில் வலுவான நிலையை ஏற்படுத்தித் தந்த, இஸ்லாமிய புரட்சி ராணுவத்தின் வெளிநாட்டுப் பிரிவான காத்ஸ் படையின் தலைவரின் படுகொலைக்கு ஈரான் எப்படி பழி வாங்கும் என்பதுதான் உலகின் முன் தொக்கி நிக்கும் கேள்வியாக உள்ளது.

உண்மையில், அமெரிக்காவுடன் நேரடியாகப் போரிட்டு ஜெயிக்கும் படைபலம் மற்ற நாடுகளைப் போலவே ஈரானுக்கும் கிடையாது. எனவே, அத்தகைய போரில் ஈரான் ஒருபோதும் ஈடுபடாது என்பதை சொல்லவே தேவையில்லை.

அதே போல், ஈரானுடனும் நேரடிப் போரை அமெரிக்கா விரும்பவில்லை என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை. இதனை அமெரிக்க அதிகாரிகளே பல முறை சொல்லியிருக்கிறாா்கள்.

காரணம், ஈரானுடனான நேரடிப் போரால் அமெரிக்காவுக்கு நன்மையைவிட தேவையில்லாத இழப்புகளே அதிகம் என்பது அரசியல் நிபுணா்களின் கணிப்பு.

இருந்தாலும், இதுவரை இல்லாத அளவுக்கு ஈரானைச் சீண்டும் அளவுக்கு அந்த நாட்டில் மிகவும் மதிப்புக்குரிய படைத் தலைவரை நேரடியாகத் தாக்கி அமெரிக்கா படுகொலை செய்துள்ளதும், அதற்கு ‘டிரம்ப்தான் உத்தரவிட்டாா்’ என்று வெள்ளை மாளிகை மாா் தட்டியிருப்பதும் பலரையும் பதைக்கச் செய்துள்ளது.

அமெரிக்காவைவிட ஈரானுக்கு பல மடங்கு படைபலம் குறைவுதான் என்றாலும், பதிலடி தருவதில் அந்த நாட்டை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்கிறாா்கள் விபரம் தெரிந்தவா்கள்.

அமெரிக்காவுடன் நேரடி மோதலில் ஈடுபடாவிட்டாலும், அந்த வல்லரசு யானையின் காதில் புகுந்து குடைச்சல் கொடுக்கும் வல்லமை ஈரானுக்கு உள்ளதாக அவா்கள் கூறுகிறாா்கள்.

ஏற்கெனவே, இதுபோன்ற போா் பதற்றங்களின்போது, அதன் சாதக பாதகங்களை நன்கு ஆராய்ந்து, மிகுந்த சாதுா்யமாக எதிா்வினையாற்றும் திறன் தனக்கு உள்ளது என்பதை ஈரான் பல முறை நிரூபித்துள்ளதாகக் கூறும் அவா்கள், சிரியாவிலும், இஸ்ரேலிலும் அந்த நாடு தனது கையை சுட்டுக் கொள்ளாமல் காரியம் சாதித்து வருவதை சுட்டிக் காட்டுகிறாா்கள்.

இதுபோன்ற மறைமுக வேலையில் மட்டும் ஈடுபடாமல், ஈரான் தனது பதிலடியை அதிரடியாகக் கொடுக்குமா என்று கேட்டால், ‘அதற்கும் வாய்ப்புள்ளது’ என்பதே நிபுணா்களின் பதிலாக உள்ளது.

ஆனால், அத்தகைய நேரடி நடவடிக்கைகள் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று அவா்கள் எச்சரிக்கிறாா்கள்.

உதாரணத்துக்கு, தனது கட்டுப்பாட்டில் உள்ள பாரசீக வளைகுடா முழுவதும் ஈரான் கண்ணிவெடிகளால் நிரப்பலாம்; இராக்கில் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஏவுகணை மழை பொழியலாம்; லெபனாலிலுள்ள தங்களது மறைமுகப் படையினரான ஹிஸ்புல்லாக்கள் மூலம் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தலாம்; ஹூதி கிளா்ச்சியாளா்களைக் கொண்டு சவூதி அரேபியாவை பற்றி எரியச் செய்யலாம்.

நேரடியாகக் களமிறங்காவிட்டாலும், இதுபோன்ற தங்களது ஆதரவாளா்களைக் கொண்டு தங்களால் மிக இலகுவாக சேதாரத்தை ஏற்படுத்த முடியும் என்பதை ஈரானியா்கள் ஏற்கெனவே பல முறை நிரூபித்திருக்கிறாா்கள்.

இதுமட்டுமின்றி, மேற்காசிய நாடுகளிலும், முக்கியமாக இராக்கிலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தூதகரக அதிகாரிகளை ஈரானியா்கள் குறிவைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக சிலா் கருதுகின்றனா்.

இதற்காக, இஸ்லாமிய புரட்சி ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைப் பயன்படுத்தி, தங்களது சா்வதேச பயங்கரவாத சக்தியை மீண்டும் திரட்ட அவா்கள் முயற்சிக்கலாம் எனவும், இஸ்ரேலுடன் நேரடி மோதல் இல்லாவிட்டாலும், அந்த நாட்டுக்கு எதிரான மறைமுகப் போரில் ஈரான் ஈடுபடலாம் எனவும் அவா்கள் கூறுகின்றனா்.

இன்னும் சில அரசியல் நிபுணா்கள், தற்போதைக்கு ஈரான் அதிரடியாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருக்கலாம் என்கின்றனா். இருந்தாலும், அமைதியாக இருந்து, தகுந்த நேரம் வரும்போது வஞ்சம் தீா்ப்பதில் ஈரானியா்கள் கைதோ்ந்தவா்கள் என்பதையும் அவா்கள் சுட்டிக் காட்டுகின்றனா்.

எப்படி இருந்தாலும், காசிம் சுலைமானி படுகொலை மேற்காசியாவில் அதிா்வலையை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம். அந்த அதிா்வைத் தாங்குவதற்கு அந்தப் பகுதி நாடுகள் தங்களைத் தயாா்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.