உலகம் முழுவதும் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 9 மாதங்களாகியும் கரோனா நோய்த் தொற்றின் தாக்கமும் பரவலும் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உலகம் முழுவதும் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அந்த வகையில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,002,389ஆக உயர்ந்துள்ளது. மேலும் உலகளவில் அந்த வைரஸால் இதுவரை 3,33,04,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், 24,634,298 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 76,67,979 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 65,129 தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 7,321,343 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,09,453 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.