விண்வெளியில் சீனா அமைத்துவரும் புதிய விண்வெளிஆய்வு நிலையத்திற்கு ஒரு பெண் உள்பட 3 பேர் கொண்ட விண்கலம் வெற்றிகரமாக சென்றடைந்தது.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இங்கு தங்கி ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் சீனாவானது தங்கள் நாட்டிற்கென சொந்தமாக விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. தியான்காங் எனப் பெயரிடப்பட்ட இந்த விண்வெளி நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 2022 டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வாங் யாபிங் எனும் பெண் விண்வெளிவீரர் உள்பட 3 பேர் கொண்ட குழு ஷென்சோ -13 விண்கலம் மூலம் சீன விண்வெளி ஆய்வு நிலையத்தில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதற்காக சனிக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இதையும் படிக்க | ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடைதிறப்பு
இந்த குழுவானது விண்வெளியில் 183 நாள்கள் தங்கி ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள உள்ளது. முன்னதாக விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவுகள், ஆக்சிஜன், உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் கடந்த மாதம் அனுப்பிவைக்கப்பட்டன.