ஆப்கானிஸ்தான் பமியானில் நிறுவப்பட்ட ஹசாரா இனத் தலைவர் அப்துல் அலி மசாரிவின் சிலையை தலிபான்கள் இன்று (புதன்கிழமை) தகர்த்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள தலிபான்கள், பமியானில் நிறுவப்பட்ட ஹசாரா இனத் தலைவர் அப்துல் அலி மசாரிவின் சிலையை இன்று (புதன்கிழமை) தகர்த்துள்ளனர்.
இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர் சலீம் ஜாவேத் ட்விட்டரில், "பமியானில் நிறுவப்பட்ட ஹசாரா இனத் தலைவர் அப்துல் அலி மசாரிவின் சிலை தகர்க்கப்பட்டுள்ளது. கடந்த முறை, அவரை கொலை செய்த தலிபான்கள், புத்தரின் சிலை உள்பட வரலாற்று மற்றும் தொல்பொருள் இடங்களை தகர்த்தனர். இதுதான் அவர்களின் மிகப் பெரிய பொது மன்னிப்பு" என பதிவிட்டுள்ளார்.
கடந்த 1995ஆம் ஆண்டு, ஹசாரா இனத் தலைவரான மசாரியை தலிபான்கள் படுகொலை செய்தனர். அதை தொடர்ந்து, ஹசாரிக்கள் மீது தலிபான்கள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். ஆப்கானிஸ்தான் மத்திய மலைப்பகுதியான ஹஜராஜத்தில்தான் பெரும்பாலான ஹசாரிக்கள் வாழ்ந்துவருகின்றனர்.
இதையும் படிக்க | ஆப்கனில் இருந்து இதுவரை 3,200 பேர் மீட்பு: அமெரிக்க ராணுவம் தகவல்
மங்கோலிய பேரரசின் நிறுவனரான செங்கிஸ் கானின் வழித்தோன்றல்களாக ஹசாரிக்கள் கருதப்படுகின்றனர். சாஹர்கிண்ட் மாகாணத்தின் ஆளுநரான சலிமா மசாரி, தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.