கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு விதித்திருந்த பொதுமுடக்கம் செப்டம்பர் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு உலக நாடுகளும் தீவிரமாக போராடி வருகின்றன. எனினும் அடுத்தடுத்த கரோனா அலையால் முன்பை விட தொற்று பரவல் அதிகரித்தவண்ணம் உள்ளது.
இதையும் படிக்க | சீனாவுடன் கைக்கோர்க்கும் தலிபான்கள்
இலங்கையில் டெல்டா வகை கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் நாடு முழுவதுமான பொதுமுடக்கம் அமலில் உள்ளது.
இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாலும், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாலும் செப்டம்பர் 6 வரை விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கத்தை செப்டம்பர் 13ஆம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,47,757 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,604 ஆகவும் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.