தென்மேற்கு பாகிஸ்தானுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலை படை பயங்கரவாதி குண்டு வெடிக்கவைத்ததில் பாகிஸ்தான் துணை ராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதி அருகே உள்ள மியான் குந்தியில் எல்லைப்புற காவலர்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்குதான், ஹசாரா ஷியா பிரிவு வணிகர்கள் காய்கறிகளை விற்றுவருகின்றனர். இந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர் என காவல்துறை துணை ஆய்வாளர் அசார் அக்ரம் ஏஎப்பி செய்திநிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
காவல்துறை பயங்கரவாத எதிர்ப்புத் படையின் செய்தித் தொடர்பாளர் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார். பலுசிஸ்தானில் தீவிர சன்னி இஸ்லாமிய குழுக்களால் ஷியா பிரிவுச் சேர்ந்த இஸ்லாமியர்கள் அடிக்கடி குறிவைக்கப்படுகின்றனர். பலுசிஸ்தானுக்கு அதிக அளவில் அதிகாரம் அளிக்கக் கோரி கிளர்ச்சியாளர்கள் எல்லைக் காவலர்கள் மீது தாக்குதல் நடத்திவருவது அங்கு தொடர் கதையாகிவருகிறது.