தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,  நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாக, தனது "உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும்" அவரை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான்
Published on
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,  நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாக, தனது "உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும்" அவரை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் கடந்த 28-ஆம் தேதி நம்பிக்கையில்லா தீா்மானத்தை நாடாளுமன்ற கீழவையில் தாக்கல் செய்தாா். அதுகுறித்த விவாதத்துக்கு அன்றைய தினமே ஒப்புதல் அளிக்கப்பட்டு, விவாதம் மாா்ச் 31-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நாடாளுமன்ற கீழவை வியாழக்கிழமை கூடியது. அவையை வழிநடத்திய துணைத் தலைவா் காசிம் சுரி அவையில் பட்டியலிடப்பட்ட அலுவல்கள் குறித்து விவாதிக்குமாறு உறுப்பினா்களைக் கேட்டுக்கொண்டாா். மொத்தம் 24 அலுவல்களில் நம்பிக்கையில்லா தீா்மானம் 4-ஆவது அலுவலாக பட்டியலிடப்பட்டிருந்தது.

ஆனால், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது உடனடியாக வாக்கெடுப்பு நடத்தும்படி வலியுறுத்தினா். பின்னா், எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் அவையை ஏப். 3-ஆம் தேதி காலை 11 மணி வரை அவையின் துணைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாக, தனது உயிருக்கு ஆபத்து இருப்பது மட்டுமின்றி, வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டு சோ்ந்து விளையாடும் எதிர்க்கட்சியினருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக அவர் கூறினார்.

“தனது உயிருக்கும் ஆபத்து உள்ளது என்பதை தேசத்திற்கு தெரிவிக்கிறேன், படுகொலைக்கும் திட்டமிட்டுள்ளவர்கள், என்னை மட்டுமல்ல, என் மனைவியையும் படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்,” என்று கான் கூறினார்.

மேலும் "நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது தான் தப்பிப்பிழைத்தால், தன்னை விட்டு ஓடிப்போன கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து தன்னால் நிச்சயமாக ஆட்சி நடத்த முடியாது. 

இதைவிட முன்கூட்டியே தேர்தல் நடத்துவதுதான் சிறந்த வழி, நான் வெற்றிபெற எனக்கு தனிப்பெரும்பான்மை அளிக்க வேண்டும் என்று நாட்டு மக்களிடம் வலியுறுத்துவேன். யாருடனும் சமரசம் செய்ய வேண்டியதில்லை,” தேர்தலை நடத்தினால் யாருக்கு எத்தனை இடம் என்று தெளிவாக தெரிந்துவிடும்.  எதிர்க்கட்சிகள் இப்போது அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்வதில் குறியாக உள்ளது என்று இம்ரான் கான் கூறினார். 

மேலும் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒரு சதி என்று கூறிய கான், இது குறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தனக்கு தெரியும் என்றும், சில எதிர்க்கட்சித் தலைவர்கள் தூதரகங்களுக்குச் செல்வதாக தனக்குத் தகவல் வந்துள்ளதாகவும்  கான் கூறினார்.

பாகிஸ்தானின் எந்தப் பிரதமரும் ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக முடித்ததில்லை. பாகிஸ்தானின் வரலாற்றில் இதுவரை எந்த பிரதமரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படவில்லை, அந்த வகையில் தற்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளும் மூன்றாவது பிரதமர் இம்ரான் கான் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com