அமெரிக்காவில் சனிக்கிழமை காலை டெக்சாஸ் கோலிவில்லி நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்துள்ளார். அந்த மர்ம நபர் குறைந்தது 4 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, அமெரிக்க காவல்துறைக்கு பிற்பகலில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர் தான் கோலிவில்லி நகர் சர்ச்சில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சிலரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகத் தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சர்ச்சை சுற்றி 40 கிமீ தூரத்திற்குப் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர்.
பணயக்கைதிகளை பிடித்து வைத்துள்ள அந்த நபர் யார் என இதுவரை போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை.
தற்போது அமெரிக்கச் சிறையில் உள்ள பாகிஸ்தானின் நரம்பியல் வல்லுநரான சித்திக் என்பவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அந்த மர்ம நபர் வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இருந்தபோது. அங்கு அவர்களைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் சித்திக் கடந்த 2010இல் கைது செய்யப்பட்டார். அவரது குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில், அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு 86 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது.
இதையும் படிக்க | தாமதமாகும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: எப்போது வெளியாகும்?
இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிபருக்கும் விளக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரை தவிர புலன் விசாரணை கூட்டாட்சிப் முகமை அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதுகுறித்து காவல்துறை தரப்பிலிருந்தோ எஃப்.பி.ஐ தரப்பில் இருந்தோ இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்தச் சம்பவத்திற்கு டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், பணயக்கைதிகளை விடுவிக்க போலீசார் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் ட்வீட் செய்துள்ளார். அவர்கள் எப்படி விடுவிக்கப்பட்டனர், அடையாளம் தெரியாத நபர் யார், அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.