அமெரிக்காவில் மின்சார வாகனங்களின் எதிர்காலம் குறித்து விவரித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், டெஸ்லா தொடர்பாக எதுவும் குறிப்பிடாத காரணத்தால் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் ஜோ பைடனை கடுமையாக சாடியுள்ளார்.
முன்னதாக, ஜோ பைடன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜிஎம் மற்றும் போர்ட் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை தயாரித்து வருகின்றனர்" என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ள எலான் மஸ்க், "டி என தொடங்கி ஏ என முடியும் நடுவில் கூட ஈஎஸ்எல் என வரும்" என கிண்டலாக டெஸ்லாவின் பெயரை பதிவிட்டுள்ளார்.
மற்றுமொரு பதிவில், "மனித வடிவத்தில் உள்ள விரும்பத்தகாத காலுறை அணிந்த பொம்மையாக பைடன் உள்ளார்" என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அமெரிக்கர்களை முட்டாள்கள் போல் பைடன் நடத்துகிறார் என்றும் விமரிசித்துள்ளார்.
பில்ட் பேக் பெட்டர் மசோதா குறித்து ஆலோசனை மேற்கொள்ள, டெஸ்லாவின் போட்டி நிறுவனங்களான ஜெனரல் மோட்டார்ஸ், போர்ட் உள்ளிட்டவற்றின் தலைமை செயல் அலுவலர்களை வெள்ளை மாளிகைக்கு பைடன் அழைத்திருந்தார்.
அதேபோல, 2030க்குள் அமெரிக்காவில் விற்கப்படும் அனைத்து வாகனங்களும் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்த நிர்வாக உத்தரவில் கடந்தாண்டு கையெழுத்திட்டபோதுகூட, இந்த நிறுவனங்களின் நிர்வாகிகளை அழைத்து பைடன் பேசியிருந்தார். ஆனால், பைடன் அரசை விமரிசிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள எலான் மஸ்க், நிர்வாகிகளின் பட்டியலில் இடம்பெறவில்லை.