கொழும்பு: இலங்கை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க (73) வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்ட நிலையில், நான்கு புதிய அமைச்சகர்கள் அதிபர் கோத்தபய ராஜபட்ச முன்னிலையில் இன்று பதவியேற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் நான்கு புதிய அமைச்சர்களை கோத்தபய நியமித்திருப்பதாகவும், ஜி.எல். பெரிஸ், தினேஷ் குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க, காஞ்சனா விஜயசேகர ஆகிய நால்வரும் அதிபர் கோத்தபய ராஜபட்ச முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. சரியான நேரத்தில் பிரேக்.. கடந்து சென்றது யானை: செம்ம விடியோ
ஜி.எல். பெரிஸ் நிதித்துறை அமைச்சராகவும், பிரசன்ன ரணதுங்க நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும், தினேஷ் குணவர்த்தன பொதுத் துறை அமைச்சராகவும், காஞ்சனா மின்சாரத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடந்த திங்கள்கிழமை நடந்த வன்முறையையடுத்து மகிந்த ராஜபட்ச தனது பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், புதிய திருப்பமாக ரணில் விக்ரமசிங்க பிரதமரானார்.
பின்னா், அதிபா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘மிகவும் கொந்தளிப்பான நேரத்தில் நாட்டை வழிநடத்தும் சவாலான பணியை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய பிரதமருக்கு வாழ்த்துகள். இலங்கையை மீண்டும் வலிமையாக்க அவருடன் இணைந்து பணியாற்றுவதை எதிா்நோக்கியுள்ளேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
பொருளாதர நெருக்கடி- வன்முறை
பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற 1948-க்கு பின்னா் மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையே இதற்கு பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. இதனால், அத்தியாவசிய பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி கடுமையாக உயா்ந்தது.
இந்த நிலைக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோா் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினா்.
இந்நிலையில், கொழும்பில் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோா் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் தாக்குதலில் ஈடுபட்டனா். இதனால் நாடு முழுவதும் பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்வதாக மகிந்த ராஜபட்ச அறிவித்தாா்.