தன்னை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற அமெரிக்கா சதி செய்து வருவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சுமத்திய குற்றச்சாட்டுக்கு அமெரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை. பாகிஸ்தானில் நடைபெற்றுவருவதை கவனித்துவருகிறோம். பாகிஸ்தான் அரசியலமைப்பு முறையையும் சட்டத்தையும் மதிக்கிறோம். ஆதரிக்கிறோம்" என்றார்.
சுதந்திரமான வெளியுறவு கொள்கையை கடைபிடித்ததால் தன்னை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வெளிநாட்டு சதி நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் குற்றம்சாட்டியிருந்தார்.
எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து மக்கள் மத்தியில் பேசிய இம்ரான் கான், "இம்ரான் கான் அகற்றப்படவில்லை எனில் பாகிஸ்தான் விளைவுகளை சந்திக்கும் என வெளிநாடு சமிக்ஞை அனுப்பியுள்ளது" என்றார்.
முதலில் அமெரிக்கா என சொல்லிய இம்ரான் கான், பிறகு திருத்தி கொண்டு வெளிநாட்டு சதி என மக்கள் மத்தியில் பேசியிருந்தார். "மார்ச் 8 அல்லது மார்ச் 7 என நினைக்கிறேன். நமக்கு அமெரிக்கா அனுப்பியது. அமெரிக்கா இல்லை. ஒரு வெளிநாடு செய்தி அனுப்பியுள்ளது. நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால்.
இதையும் படிக்க | ரஷியாவின் தெற்கு குரில் தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம்
ஒரு சுதந்திரமான நாட்டுக்கு இப்படி செய்தி அனுப்புவது. எனக்கும் நாட்டுக்கும் எதிரானது. எனக்கு எதிராகவே குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு எதிராக அல்ல. நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், பாகிஸ்தான் மன்னிக்கப்படும் என்றும் இல்லை எனில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது" என இம்ரான் கான் பேசினார்.
வெளிநாட்டிலிருந்து வந்துள்ள அந்த ரகசிய கடிதத்தில் இருப்பதை இம்ரான் கான் மக்களிடம் கடந்த வாரம் பகிர்ந்து கொண்டார். வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு எச்சரிக்கை கடிதம் வந்துள்ளதாக இம்ரான் கான் கூறியிருந்தார்.
பாகிஸ்தான் நாட்டின் தூதர்கள், மற்றொரு நாட்டின் தூதர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொள்வது அந்த கடிதத்தில் இடம்பெற்றிருப்பதாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு மத்தியில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் ஞாயிற்றுக்கிழமை வரும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.