புதிய பேரவைத் தலைவராக முன்னாள் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரபை நியமிப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (சனிக்கிழமை) கூடுகிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்ற பேரவைத் தலைவர் தேர்தலில் அஷ்ரபுக்கு எதிராக வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றித் தேர்வாகியுள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவுள்ளார்.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தத் தவறிய முன்னாள் பேரவைத் தலைவர் ஆசாத் காசிர் கடந்த 9-ம் தேதி பதவியை ராஜிநாமா செய்தார். மேலும், இம்ரான் கானின் கட்சி உறுப்பினரும், பேரவை துணைத் தலைவருமான காசிம் கான் சுரிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. காசிம் கான் தற்போது பேரவைத் தலைவராக (பொறுப்பு) செயல்பட்டு வருகிறார்.