தன்னையும் தனது குடும்பத்தையும் பிடிக்க வந்த ரஷிய திருப்புகள் ஒரு கட்டத்தில் நெருங்கிவிட்டதாக உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். டைம் இதழுக்கு அளித்த பேட்டியில், உக்ரைன் போரின் தொடக்கத்தில் நிகழ்ந்த அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரஷிய அதிபர் புதின் அறிவித்தார். போர் தொடங்கிய அந்த நாள், என்னவெல்லாம் நடந்தது என்பது குறித்து அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
நேர்காணலில் ஒரு சில சம்பவங்களை தெளிவாக விளக்கிய அவர், "குண்டுகள் வீச தொடங்கப்பட்டுவிட்டதால் தூங்கி கொண்டிருந்த எனது 17 வயது மகளையும் 9 வயது மகனையும் எழுப்பினேன். குண்டு சத்தம் உரத்த கேட்டது. அங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்துவந்தது.
ரஷிய துருப்புகளின் இலக்கு நான் என்பதும் அதிபர் அலுவலகம் பாதுகாப்பு இடம் இல்லை என்பதும் தெரியவந்தது. என்னை கொலை செய்து எனது குடும்பத்தை பிடிப்பதற்காக ரஷிய ராணுவ வீரர்கள் பாராசூட் மூலம் கிவ்வில் குதித்திருப்பதாக எனக்கு தகவல் கொடுக்கப்பட்டது" என்றார்.
பின்னர், உக்ரைன் அதிபர் மாளிகை எப்படி பாதுகாக்கப்பட்டது என்பது குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஸெலன்ஸ்கியின் தலைமை பணியாளர் ஆண்ட்ரி யெர்மக், "அன்றைய இரவுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களை சினிமாவில் கூட பார்த்திருக்க முடியாது.
இதையும் படிக்க | வாழ்த்து மழையில் ரோஹித் சர்மா: விருப்பங்கள் சாத்தியமாகட்டும்!...
பின்புறத்தில் உள்ள வாயிலை காவல்துறையினர் தடுப்பின் மூலமாகவும் ஒட்டு பலகையின் மூலமாகவும் அடைத்தனர். அது கோட்டை மாதிரி அல்ல குப்பை கிடங்க போல் காட்சி அளித்தது. ரஷியா போர் நடத்திய முதல் நாள் இரவு, விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டது. ஸெலன்ஸ்கிக்கும் அவரது உதவியாளர்களுக்கும் குண்டு துளைக்காத உடைகளை பாதுகாப்பு அதிகாரிகள் கொண்டுவந்த தந்தனர்" என்றார்.
உக்ரைன் ராணுவ புலனாய்வு பிரிவின் மூத்த அதிகாரி ஒலேக்சி அரேஸ்டோவிச் இதுகுறித்து கூறுகையில், "ஸெலன்ஸ்கியின் மனைவியும் குழந்தைகளும் வீட்டின் உள்ளே இருக்கும்போதே ரஷியா ராணுவத்தினர் இரண்டு முறை மதிலை உடைக்க முயற்சித்தனர்" என்றார்.