இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச மீதான அதிருப்தி குறித்து விவாதிக்க நாடாளுமன்ற அலுவல்களை நிறுத்தி வைக்குமாறு எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததையடுத்து, அதிபா் கோத்தபய ராஜபட்சவால் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.
இதையும் படிக்க | கார்த்தி சிதம்பரம் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ சோதனை
இந்நிலையில், இன்று காலை இலங்கை நாடாளுமன்றம் கூடியது. அதிபர் கோத்தபய ராஜபட்ச மீதான அதிருப்தி குறித்து விவாதிக்க நாடாளுமன்ற அலுவல்களை நிறுத்திவைக்குமாறு உறுப்பினர் சுமந்திரன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். அப்போது, தீர்மானத்திற்கு ஆதரவாக 68 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்பட 119 பேர் எதிராக வாக்களித்ததால், நாடாளுமன்றத்தில் தீர்மானம் தோல்வி அடைந்தது.