செங்கல் சூளைகளில் ஆப்கன் குழந்தைகள்! (புகைப்படங்களுடன்)

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, பொருளாதார வீழ்ச்சியினால் அங்கு குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
செங்கல் சூளைகளில் ஆப்கன் குழந்தைகள்! (புகைப்படங்களுடன்)

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, பொருளாதார வீழ்ச்சியினால் அங்கு குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம் என பல்வேறு நாடுகளில் சட்டம் இருந்தும், குழந்தைத் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக பணிகளில் ஈடுபடுத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உலகம்  முழுவதும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 16 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்(யுனிசெஃப்) தகவல் வெளியிட்டுள்ளது. 

கரோனா பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகளினால் மேலும் 90 லட்சம் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பொருளாதார வீழ்ச்சியினாலும், உலக நாடுகள் வழங்கும் நிதியை நிறுத்தியதாலும் அங்கு குழந்தைகள் அதிகமாக பணியமர்த்தப்படுகின்றனர். அங்கு இது மிகவும் சாதாரணமாக மாறி வருகிறது. 

'சேவ் த சில்ட்ரன்' என்ற அமைப்பினால் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஆப்கனில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் 50% குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை ஹோட்டலில் மேசை துடைப்பதற்கு வேலைக்கு அமர்த்தியுள்ளனர். 

அதுபோல, அங்குள்ள செங்கல் சூளைகளில் நான்கு அல்லது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், கோடை வெப்பத்திலும் அதிகாலை முதல் இரவு வரை தங்கள் குடும்பத்தினருடன் வேலை செய்கிறார்கள். செங்கல் தயாரிப்பதற்கான அனைத்து நிலைப் பணிகளையும் அவர்கள் செய்கிறார்கள். தண்ணீர் நிரம்பிய பெரிய கேன்களை இழுத்துச் செல்கின்றனர், சேறு நிறைந்த மரச் செங்கல் அச்சுகளை எடுத்துச் சென்று வெயிலில் உலர வைக்கின்றனர். 

செங்கல் சூளைகளுக்கு அருகே பாழடைந்த மண் வீடுகளில்தான் இவர்களது குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கு பெரும்பாலானவர்களுக்கு ஒரு நாள் உணவு என்பது தேநீரில் ஊறவைத்த ரொட்டி என்பது அதிர்ச்சியாக உள்ளது. 

இந்த குழந்தைகள் தங்கள் குடும்பத்தின் தேவையைத் தவிர வேறு எதுவும் அறியாது வேலை செய்கிறார்கள். இவர்களில் சிலர் மட்டுமே முன்னதாக பள்ளிக்குச் சென்றுள்ளனர்.

செங்கல் சூளையில் தனது 5 முதல் 12 வயது வரையிலான மூன்று குழந்தைகளுடன் வேலை செய்யும் ரஹீம் கூறுகையில், முன்னதாக பள்ளியில் படித்த இவர்களை வேலைக்கு அமர்த்த தவிர்த்துவந்தேன். ஆனால், தலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, போரின் காரணமாக பொருளாதாரம் மோசமடைந்ததால், தனக்கு வேறு வழியில்லாமல் பணிக்கு அமர்த்தியதாகக் கூறுகிறார். 

இதுபோன்று அங்குள்ள ஒவ்வொரு குழந்தைகளின் பின்னணியிலும் வறுமை வாட்டிக்கொண்டிருக்கிறது. 

பொம்மைகள் அல்லது விளையாட்டு குறித்து கேட்டால் அவர்கள் லேசான சிரிப்புடன் கைகளை விரிக்கிறார்கள். 

கரிகளை அள்ளும் 9 வயது சிறுவனின் விருப்பம் என்னவென்று கேட்டால், 'நல்ல உணவு வேண்டும், பள்ளிக்குச் செல்ல வேண்டும்' என்று கூறுகிறான். 

நபீலா என்ற 12 வயது சிறுமி கடந்த 6 ஆண்டுகளாக செங்கல் சூளையில் வேலை செய்வதாகத் தெரிவிக்கிறார்.

சூளையில் 1,000 செங்கல் செய்தால் கூலியாக 4 டாலருக்கு நிகரான பணம் தரப்படுகிறது. தனி ஒரு ஆளாக செய்தால் ஒருநாள் 1,000 செங்கல்கள் உருவாக்க முடியாது. அதுவே, குழந்தைகள் உதவும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 1,500 செங்கல் உருவாக்க முடியும் என்று அங்குள்ள தொழிலாளர்கள் கூறுகின்றனர். 

இந்த கணக்கெடுப்பில், குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் குடும்பங்களின் சதவிகிதம் (கடந்த டிசம்பர் முதல் ஜூன் வரை) 18 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஆப்கன் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு பரிந்துரைக்கிறது. 

கடந்த ஓராண்டில் ஆப்கன் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதையும் இந்த கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தங்கள் வருமானத்தில் பாதி அல்லது அதற்கு மேல் குறைந்துள்ளதாக கடந்த ஜூன் மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 77% குடும்பத்தினர் கூறியுள்ளனர். இது கடந்த டிசம்பரில் 61 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com