நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது ரஷியாவின் லூனா-25 விண்கலம்!

ரஷியாவின் லூனா-25 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது என்று அந்நாட்டின் விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.
நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது ரஷியாவின் லூனா-25 விண்கலம்!
Published on
Updated on
1 min read

ரஷியாவின் லூனா-25 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது என்று அந்நாட்டின் விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. 

நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரஷியாவின் லூனா-25 விண்கலம் சோயஸ் ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் தென் தருவத்தில் அந்த விண்கலம் தரையிறங்கி அங்கிருக்கும் நீா்வளம் பற்றியும், பிற கனிம வளங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் ரஷியாவின் லூனா-25 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளதாக அந்நாட்டின் விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

நிலவினை சுமார் 5 நாட்களுக்கு வட்டமிடும் லூனா-25 விண்கலம், பின்னர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி திட்டமிடப்பட்ட நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படவுள்ளது. அதாவது இந்தியாவின் சந்திரயான் -3 வின்கலம் தென் துருவத்தில் தரையிறங்க திட்டமிடப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு லூனா-25 விண்கலம் தரையிறக்கப்படவுள்ளது.

நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சுமாா் ரூ.615 கோடியில் வடிவமைத்த சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த மாத தொடக்கத்தில் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்து, தற்போது நிலவின் தரைப் பகுதியின் குறைந்தபட்சம் 153 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 163 கி.மீ. தொலைவு கொண்ட சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நிலவைச் சுற்றி வருகிறது.

இந்த நிலையில் நிலவின் தென் துருவத்தில் இருக்கும் நீா்வளம் பற்றியும், பிற கனிம வளங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளவதற்காக ஆகஸ்ட் 11 -ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட ரஷியாவின் லூனா-25 விண்கலம், சந்திரயான்-3 விண்கலம்  தரையிறக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தரையிறக்கப்படவுள்ளது. ஆனால் இது சந்திரயான்-3 விண்கலம் நுழையும் குறுகிய பாதையில் நடைபெற உள்ளது என்பது எந்த விண்வெளி நிறுவனத்தாலும் ஆராயப்படவில்லை.

நிலவின் தென் துருவத்திற்கு 47 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக லூனா-25 விண்கலத்தை ரஷியா அனுப்பியுள்ளது. அதே பகுதிக்கு வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மீண்டும் மனிதர்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்வதற்கான பணிகளை நாசாவும் மேற்கொண்டு வருகிறது.

சோவியத் யூனியனின் 1976 நிலவுப் பயணமான லூனா-24-க்குப் பிறகு எந்த ரஷிய விண்கலமும் நிலவின் சுற்றுப்பாதைக்கு செல்லவில்லை. "இந்த திட்டத்தின் வெற்றிக்கு நிலவின் சுற்றுப்பாதையில் லூனா-25 நுழைவது மிகவும் முக்கியமானது" என்று ரஷிய விண்வெளித் திட்டங்களைக் கண்காணிக்கும் அனடோலி ஜாக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com