அட்லாண்டாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன் நடந்த போராட்டத்தில், தீவிர பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளால் காப்பாற்றப்பட்ட அந்த நபர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
இது எந்த வகையிலும் தீவிரவாதத்தோடு தொடர்புடைய சம்பவமில்லை எனவும் தூதரக ஊழியர் யாருக்கும் எந்த வகையிலும் அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் தீவிரமடைந்து பாலஸ்தீன ஆதரவாளர் தன்மீது பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்துக்கொண்டார். காப்பாற்ற முயன்ற காவலருக்கும் கை கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது நடந்துவரும் யூத மற்றும் இஸ்லாமிய சமூகத்திற்கு இடையேயான பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது தென்கொரியா
14,000-த்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர், 7 நாள்கள் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை மீண்டும் துவங்கிய இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை 178 பேர் காஸாவில் கொல்லப்பட்டுள்ளனர்.