உலக புதுப்பிக்கத்தக்க மற்றும் ஆற்றல் திறன் உறுதிமொழியை 116 நாடுகள் ஏற்றுள்ள நிலையில் இந்தியா, சீனா கையொப்பமிடவில்லை.
இந்த உறுதிமொழியின் படி உலக நாடுகள் தங்களின் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை குறைந்தபட்சம் 11,000 கிகாவாட்ஸ் அளவுக்கு உயர்த்த வேண்டும், மற்றும் உலகளாவிய ஆற்றல்திறன் மேம்பாட்டுக்கான ஆண்டு விகிதத்தை இரட்டிப்பாக்க வேண்டும்.
இது உலகில் பசுமையற்ற வாயுக்கள் வெளியீட்டைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு முயற்சியாகும். பருவநிலை பாதுகாப்பு நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டில் (காப் 28) மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியின் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்க அனைத்து நாடுகளுக்கும் வலுயுறுத்தப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறனை மூன்று மடங்கு உயர்த்தும் இந்தியாவின் நோக்கத்தினை காப் 28-ல் பிரதமர் மோடி வெளிப்படுத்தியிருந்த போதிலும் உறுதிமொழியில் இந்தியா இதுவரை கையொப்பமிடவில்லை.
இதையும் படிக்க: ஜெர்மனியை முடக்கிய பனிப்புயல் - புகைப்படங்கள்
இதுகுறித்து பேசிய 'கிளைமேட் ட்ரென்ட்ஸ்' நிறுவனர் ஆர்த்தி கோஸ்லா, இந்தியா தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியினை மூன்று மடங்கு உயர்த்துவதில் உள்ள சிக்கல், அதன் நிலக்கரி பயன்பாடுதான் எனத் தெரிவித்துள்ளார். உலகில் பசுமையற்ற வாயுக்களை அதிகமாக வெளியேற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் காலநிலை நிதிக்கு போதுமான ஆதரவளித்துள்ள போதிலும், புதுப்பிக்க முடியாத எரிபொருள் விரிவாக்கத்திட்டங்களை கைவிட மறுப்பு தெரிவித்துள்ளன எனவும் கூறியுள்ளார்.
இந்தியா இந்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டுமெனில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டினை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும், இந்தியா கூடுதல் நிதி உதவி இன்றி இந்த உறுதிமொழியை நிறைவேற்ற முடியாது என எரிசக்தி பொருளாதார ஆராய்ச்சியாளர் விபீதி கார்க் தெரிவித்துள்ளார்.