ட்விட்டரில் விளம்பரங்கள் பாதியாக குறைந்ததால் நிறுவனம் இன்னும் நஷ்டத்திலேயே இயங்கிக் கொண்டிருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் வியாபாரம் குறித்து ஆலோசனை வழங்குவதாக வெளியான ட்விட் ஒன்றுக்கு பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ட்விட்டருக்கான விளம்பரங்கள் 50 சதவிகிதம் குறைந்ததால் நாங்கள் இன்னும் நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அதேபோல ட்விட்டருக்கு அதிக அளவிலான கடன் சுமை இருக்கிறது. வியாபாரம் சார்ந்த மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக ட்விட்டரை லாபப் பாதைக்கு கொண்டுவர வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: கீர்த்தி சுரேஷின் கண்ணிவெடி!
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் எலான் மஸ்க் பல்வேறு விதமான மாற்றங்களை அந்நிறுவனத்தில் கொண்டு வந்துள்ளார். முதலில் அந்த நிறுவனத்தின் உயர் பொறுப்புகளில் இருந்தவர்களை பணியிலிருந்து நீக்கினார். பின்னர், அதிக அளவில் ட்விட்டரில் பணிபுரியும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ட்விட்டரில் பதிவிடும் கருத்துகள் தொடர்பாக மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்ட சிலர் மீண்டும் ட்விட்டரில் அனுமதிக்கப்பட்டனர்.
ட்விட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறிய விளம்பரதாரர்கள் மீண்டும் வருவார்கள். ட்விட்டர் நிறுவனம் லாபப் பாதையில் பயணிக்கும் என கடந்த ஏப்ரலில் மஸ்க் கூறியிருந்தார். அதன் பின், மே மாதத்தில் விளம்பரத் துறையில் அனுபவமிக்க ஒருவரை ட்விட்டருக்கு புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்தார். இருப்பினும், ஒரு நாளில் இத்தனை ட்விட்களை மட்டும் தான் பயனாளர் பார்க்க முடியும் என ட்விட்டர் சில கட்டுப்பாடுகளை விதித்தது அதன் பயனாளர்களை அதிருப்தியடையச் செய்தது.
இந்த நிலையில், ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.